Published : 21 Aug 2022 07:41 AM
Last Updated : 21 Aug 2022 07:41 AM

கரோனாவுக்கு பிறகு பிசியாகி இருக்கிறது, திரைத்துறை - அதிகரிக்கும் பிறமொழி படங்கள், குவியும் வெப் தொடர்கள்

கரோனாவுக்கு பிறகு பிசியாகி இருக்கிறது, திரைத்துறை. அதற்கு முக்கிய காரணம், வெப் தொடர்கள். வேலை இல்லாமல் இருந்த சினிமா தொழிலாளர்கள், இந்த வாய்ப்பை கெட்டியாகப் பிடித்துக் கொண்டார்கள். இதற்கிடையே பான் இந்தியா திரைப்படங்களின் அதிகரிப்பு, குவியும் வெப் தொடர்கள், கார்ட்டூன் நெட்வொர்க், குழந்தைகளுக்கான சேனல்கள், சின்னத்திரை தொடர்கள் என டப்பிங் கலைஞர்களும் பரபரப்பாக மாறியிருக்கிறார்கள்.

திரைப்படங்களை மட்டுமே நம்பி இருந்த இந்தக் கலைஞர்கள், ஓடிடி தளங்களில் வெளியாகும் பிற மொழி படங்கள் மற்றும் வெப் தொடர்களின் தமிழ் டப்பிங்கில் பிசியாகிவிட்டார்கள். சாலிகிராமத்தில் நிறைந்திருக்கும் ஸ்டூடியோக்களில் இரவு பகலாக நடக்கிறது டப்பிங் பணிகள். யாருக்கும் நின்று பேச கூட நேரமில்லை.

விசாரித்தால், “டப்பிங் கலைஞர்களின் தேவை இப்போது அதிகரித்திருக்கிறது” என்கிறார் ஜெயம் ஸ்டூடியோஸ் உரிமையாளர் ஆர்.போத்திராஜ். “சிரீயல்கள், வெப் தொடர்கள், கார்ட்டூன் நெட்வொர்க், பான் இந்தியா படங்கள் என எதை எடுத்துக் கொண்டாலும் இந்தியை அடுத்து தமிழ்தான் வியாபார ரீதியாக பெரிய துறையாக இருக்கிறது. இதனால் தமிழ் மார்க்கெட்டை குறிவைத்து அதிக பணிகள் நடக்கின்றன.

இங்கு குறைந்தது 10 ஓடிடி தளங்கள் இருக்கின்றன. ஒவ்வொன்றிலும் கொரியன், ஹாலிவுட் உட்பட பல்வேறு வெளிநாட்டு வெப் தொடர்கள், இந்தி, தெலுங்கு, மராத்தி உட்பட உள்நாட்டு தொடர்கள், திரைப்படங்கள், நிகழ்ச்சிகள் தாராளமாகக் குவிந்திருக்கின்றன.

அதே போல ஒரு சேனலில்,குறைந்தது 10 முதல் 12 வரையிலான சீரியல்கள் ஒளிபரப்பப்படுகின்றன. இதில் பல டப்பிங் சீரியல்களும் உண்டு. ஒரிஜினல் தொடர்கள், பிற மொழி தொடர்களுக்கான டப்பிங் என பின்னணி குரல் கொடுப்பவர்களின் தேவை இப்போது அதிகரித்திருக்கிறது” என்கிறார் அவர்.

கரோனா கற்றுக்கொடுத்த, ‘வொர்க் ஃபிரம்ஹோம்’, டப்பிங் கலைஞர்களுக்குப் பொருந்தாமல் இருந்தது. ஸ்டூடியோக்களுக்கு சென்றுதான் பேச வேண்டும் என்ற நிலை அவர்களுக்கு. ஆனால், இப்போது சுமார் நூறு முன்னணி டப்பிங் கலைஞர்கள், தங்கள் வீட்டிலேயே, ஸ்டூடியோ உருவாக்கி, ரெக்கார்ட் செய்து அனுப்புவதாகச் சொல்கிறார்கள்.

இப்படி இருந்தாலும் சினிமாவைத் தவிர மற்ற எதிலும் பின்னணி குரல் கலைஞர்களுக்குப் போதுமான ஊதியம் இல்லை என்கிறார், டப்பிங் யூனியன் துணைத் தலைவர் எம்.ராஜேந்திரன்.

“ஓடிடி-யில் வெளியாகும் பிறமொழி வெப்தொடர்கள், திரைப்படங்களுக்கானப் பின்னணி குரல் பணிகள் அதிகமாக நடப்பதும் கலைஞர்கள் பிசியாக இருப்பதும் உண்மைதான். ஆனால்,வெப் தொடர்களில் மிகக்குறைவானஊதியமே வழங்குகிறார்கள். ஒரு நடிகருக்கு குரல் மூலம் உயிர் கொடுப்பதுபின்னணி குரல் கலைஞர்கள்தான். அவர் அழுது கதறி நடிக்கிறார் என்றால்,நாங்களும் அப்படித்தான் குரல்கொடுக்க வேண்டும். ஆனால், எங்களுக்கு நியாயமான ஊதியத்தைக் கொடுக்கத் தயாரிப்பாளர்கள் தயங்குகிறார்கள். ஓடிடியில் ஒரே நல்ல விஷயம் என்னவென்றால், டப்பிங் பேசி முடிந்ததுமே கையில் பணம் கொடுத்துவிடுகிறார்கள். ஆனால், அது மிகவும்குறைவான ஊதியம். அதை அதிகப்படுத்திக் கொடுக்க வேண்டும்” என்று கோரிக்கை வைக்கிறார், ராஜேந்திரன்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x