Published : 14 Aug 2022 04:24 PM
Last Updated : 14 Aug 2022 04:24 PM

இயக்குநர்களிடம் கதை கேட்கும் அருள் சரவணன் - விரைவில் அடுத்தப் படம் அறிவிப்பு?

'தி லெஜண்ட்' படத்தில் நடித்ததன் மூலம் திரையுலகில் நாயகனாக அறிமுகமாகியுள்ள அருள் சரவணன் விரைவில் புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜெடி - ஜெர்ரி இயக்கத்தில் அருள் சரவணன் அறிமுக நடிகராக நடித்துள்ள படம் 'தி லெஜண்ட்'. இந்தப் படம் கடந்த 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ஊர்வசி ரவுடேலா, கீதிகா திவாரி, சுமன், விவேக், யோகிபாபு, நாசர், ரோபோ ஷங்கர் என பெரிய நடிகர் பட்டாளமே நடித்திருந்தது.

ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள இப்படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். பான் இந்தியா முறையில் உருவான இந்தப் படம் உலகம் முழுவதும் 2500 திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. தமிழ்நாட்டில் மட்டும் 600-க்கும் அதிகமான திரைகளில் வெளியானது.

படம் பெரும்பாலும் எதிர்மறையான விமர்சனங்களையே பெற்றது. இருப்பினும் தமிழகத்தின் சில திரையரங்குகளில் 'தி லெஜண்ட்' திரைப்படம் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், தனது முதல் படமான 'தி லெஜண்ட்' சரியான வரவேற்பைப் பெறாத நிலையில், அடுத்தகட்டமாக புதிய படம் ஒன்றில் நடிக்க அருள் சரவணன் திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக அவர் இயக்குநர்களை சந்தித்து தனது அடுத்தபடம் குறித்த கதைகளை கேட்டு வருகிறாராம்.

முதல் படம் வரவேற்பு பெறவில்லை என்றாலும் திரையுலகில் தனது பயணத்தை தொடர்வார் என்றே கூறப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக தான் அருள் சரவணன் அண்மையில் பதிவிட்ட ட்வீட்டில், ''விரைவில் ஊடகவியலாளர்களை சந்திக்கிறேன்'' எனத் தெரிவித்திருந்தார்.

இதனால், விரைவில் தனது புதிய படத்தின் அறிவிப்போடு அருள் சரவணன் களமிறங்குவார் எனத் தெரிகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x