Published : 14 Aug 2022 01:16 PM
Last Updated : 14 Aug 2022 01:16 PM

சாராயக் கடைகளை நடத்தும் அரசு ஏன் படங்களை தயாரிக்கக் கூடாது? - சீமான் கேள்வி

''சாராயக் கடைகளை அரசாங்கம் நடத்தும்போது ஏன் திரைப்படத்தையும் தயாரிக்கக் கூடாது?'' என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் கோபிநாத் இயக்கத்தில் வெற்றி நடிக்கும் திரைப்படம் 'ஜீவி-2'. கடந்த 2019ல் வெளியான 'ஜீவி' படத்தின் இரண்டாம் பாகமாக அதன் தொடர்ச்சியாக இது உருவாகி உள்ளது. இதில், அஸ்வினி சந்திரசேகர், ரோகிணி, மைம் கோபி, கருணாகரன் மற்றும் ரமா என முதல் பாகத்தில் இடம்பெற்ற அனைத்து முக்கிய நட்சத்திரங்களும் நடித்துள்ளனர்.

இந்தப் படத்திற்கு கே.எஸ்.சுந்தரமூர்த்தி இசையமைக்க, பிரவீண் குமார் ஒளிப்பதிவு செய்கிறார். வரும் ஆகஸ்ட் 19-ஆம் தேதி ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் இந்த படம் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு பேசிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், ''ஆஹா ஓடிடி தளத்தை தமிழிலும் கொண்டுவர வேண்டுமென அவர்கள் நினைத்ததற்காகவே அவர்களை பாராட்டலாம். எல்லோருக்கும் பிரியாணி சாப்பிடத்தான் ஆசை. ஆனால் கூழ் தானே கிடைக்கிறது. தம்பி சூர்யாவின் ஜெய்பீம் திரைப்படம் தியேட்டர்களில் வெளியாக விட்டாலும் கூட ஓடிடி தளத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.

தெலுங்கில் வெளியான 'கொண்டபெல்லம்' என்கிற படத்தை ஓடிடி தளத்தில் தான் பார்த்தேன். அவ்வளவு நேர்த்தியான படம் தியேட்டர்களில் வெளியானதா என்று கூட தெரியாது. ஆனால் ஓடிடி தளத்தில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. அதனால் இருக்கும் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

விளையாட்டுப் போட்டிகளில் வெண்கலப் பதக்கம் வென்றவர்களுக்கு கூட ரூ.10 கோடி, ரூ.20 கோடி என அரசுகள் போட்டி போட்டு பரிசு வழங்குகின்றனர். ஆனால் விருது வென்று வரும் படைப்பாளிகளுக்கு பாராமுகம் காட்டுகின்றன.

சாராயக் கடைகளை அரசாங்கம் நடத்தும்போது ஏன் திரைப்படத்தையும் தயாரிக்கக் கூடாது.. நிச்சயமாக ஒருநாள் திரையுலகில் மறுமலர்ச்சி ஏற்படும்.அந்த நாளும் வரத்தான் போகிறது” என்று கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x