Published : 06 Aug 2022 08:24 PM
Last Updated : 06 Aug 2022 08:24 PM

3 ஆண்டுக்குப் பிறகு மீண்டும் தொடங்கிய த்ரிஷா - மோகன்லால் படம்

மோகன்லால் - த்ரிஷா நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு 3 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது மீண்டும் துவங்கியுள்ளது.

மோகன்லாலை வைத்து இயக்குநர் ஜீது ஜோசப் இயக்கிய படம் 'த்ரிஷ்யம்'. இப்படம் நல்ல வரவேற்பை பெற்றதையடுத்து, தமிழ், இந்தி, தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டு அனைத்து தரப்பினரிடையேயும் நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. இப்படம் தமிழில் கமல், கௌதமி நடிப்பில் 'பாபநாசம்' என்ற பெயரில் வெளியானது. இந்தப் படத்தையடுத்து ஜீது ஜோசப் 'த்ரிஷ்யம் 2' படத்தை இயக்கினார். அந்தப் படமும் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதன் பின்னர் மோகன்லாலை வைத்து அவர் இயக்கிய 'ட்வல்த் மேன்' திரைப்படம் ஓடிடியில் வெளியானது.

இந்தப் படங்களுக்கு முன்னதாக அவர் மோகன்லால், த்ரிஷா, நடிப்பில் 'ராம்' என்ற படத்தை ஆரம்பித்தார். படத்தின் பெரும்பாலான காட்சிகள் வெளிநாடுகளில் படமாக்கப்பட வேண்டி இருந்ததால், கரோனா பரவல் காரணமாக அந்தப் படம் பாதியில் நிறுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்துதான் த்ரிஷ்யம் 2 படத்தை இயக்கினார் ஜீத்து ஜோசப்.

இந்நிலையில், தற்போது மீண்டும் 'ராம்' படத்தின் ஷூட்டிங் தொடங்கியுள்ளதாக இயக்குநர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 8 முதல் 10 நாட்கள் வரை படப்பிடிப்பு நடக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

இதுபற்றி தனது சமூக வலைதளப்பக்கத்தில் குறிப்பிட்டுள்ள இயக்குநர் ஜீத்து ஜோசப், 'மூன்று வருடத்துக்குப் பிறகு ராம் படத்தின் ஷூட்டிங் இன்று தொடங்குகிறது. உங்களின் ஆதரவும் வாழ்த்துகளும் தேவை' என்று தெரிவித்துள்ளார்.

கேரளாவின் எர்ணாகுளத்தில் இன்று முதல் படப்பிடிப்பு தொடங்கி இருக்கிறது.தொடர்ந்து இங்கிலாந்து, மொராக்கோ, லண்டன் மற்றும் துனிசியா உள்ளிட்ட வெளிநாடுகளிலும் படப்பிடிப்பை நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. மோகன்லால் - ஜீத்து கூட்டணியில் மிகப் பெரிய பட்ஜெட்டில் இப்படம் உருவாக உள்ளது குறிப்பிடத்ததக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x