Published : 04 Aug 2022 11:38 PM
Last Updated : 04 Aug 2022 11:38 PM

'இந்தியன் 2' படத்தில் இருந்து விலகல்? - வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த காஜல் அகர்வால்

'இந்தியன் 2' படப்பிடிப்பு மீண்டும் தொடங்கவுள்ளதை நடிகை காஜல் அகர்வால் உறுதிப்படுத்தியுள்ளார்.

லைகா நிறுவனம் தயாரிப்பில் இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'இந்தியன் 2'. இதில் கமல்ஹாசன், காஜல் அகர்வால், சித்தார்த், ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பல்வேறு காரணங்களால் தடைப்பட்டுக் கொண்டே இருந்தது. இறுதியாக லைகா நிறுவனத்துக்கும், ஷங்கருக்கும் மோதல் உருவானது.

தற்போது தெலுங்கில் ராம்சரண் இயக்கத்தில் உருவாகும் படத்தை இயக்கவுள்ளார் ஷங்கர். அவருக்கு எதிராக சென்னை மற்றும் ஹைதராபாத் நீதிமன்றங்களில் வழக்குத் தொடர்ந்தது லைகா நிறுவனம். இது திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பிற படங்களை இயக்க ஷங்கருக்குத் தடை விதிக்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது.

இந்தப் பிரச்சினைகளால் மீண்டும் 'இந்தியன் 2' திரைப்படம் தொடங்கப்படுமா என்ற கேள்வி எழுந்தது. ஆனால், தற்போது 'இந்தியன் 2' படத்தின் சர்ச்சைகள் அனைத்தும் முடிவுக்கு வந்துவிட்டதாக சொல்லப்படுகிறது. தற்போது, மீண்டும் படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி செப்டம்பர் முதல் வாரம் படத்தின் ஷூட்டிங் தொடங்கலாம் என கூறப்பட்ட நிலையில் அது தற்போது உறுதியாகியுள்ளது. இதில் தொடக்கத்தில் காஜல் அகர்வால் ஒப்பந்தம் செய்யப்பட்ட நிலையில், அவர் சமீபத்தில் தாய் ஆனதால் அவர் நீக்கப்பட்டுளளதாகவும், அவருக்கு பதிலாக தீபிகா படுகோன் அல்லது கேத்ரினா கைஃபை நடிக்க வைக்க படக்குழு திட்டமிட்டு வருவதாகவும் செய்திகள் வெளியாகின.

காஜல் அகர்வால் இன்று இன்ஸ்டாகிராம் மூலம் கொடுத்த பேட்டி ஒன்றில், இந்த தகவலை மருத்துள்ளதுடன், "செப்டம்பர் 13 முதல் இந்தியன் 2 படப்பிடிப்பில் மீண்டும் கலந்துகொள்ள உள்ளேன்" எனவும் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x