Published : 12 Jul 2022 01:42 PM
Last Updated : 12 Jul 2022 01:42 PM

ரஹ்மானின் மாயஜால பின்னணியிசைக்காகக் காத்திருக்கிறேன் - இயக்குநர் அஜய் ஞானமுத்து

நடிகர் விக்ரம் நடிப்பில் அடுத்து வெளியாகவுள்ள திரைப்படம் 'கோப்ரா'. இமைக்கா நொடிகள் படத்தை இயக்கிய அஜய் ஞானமுத்து இந்தப் படத்தை இயக்க, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். கேஜிஎஃப் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி விக்ரமுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான் ஒரு முக்கிய ரோலில் நடித்துள்ளார். படத்தில் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடந்தது. இதில், படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

விழாவில் இயக்குநர் அஜய் ஞானமுத்து பேசுகையில், ''தயாரிப்பாளர் லலித் குமார் படத்தின் இசைக்காக ரஹ்மானை கேட்கலாமா? எனக் கேட்டார். அவர் என்னை ஏதோ 'பிராங்க் பண்ணுகிறார்’ என்று எண்ணி, நானும் சரியென்றேன். சில தினங்கள் கழித்து ரகுமானை அவர்களது வீட்டில் சந்தித்து கதையை சொல்லுங்கள் என சொன்னார். எனக்கோ ரஹ்மானை சந்தித்து அவருடன் ஒரே ஒரு புகைப்படம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற ஆசை மட்டும் இருந்தது. கதையை விவரிக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை.

அதன்போலவே ரஹ்மானை அவரது வீட்டில் சந்தித்தபோது, கதையை சொல்ல தயாரா? என கேட்டார். நான் உங்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள விரும்புகிறேன். எடுத்துக் கொள்ளலாமா? என்றே முதலில் கேட்டேன். புகைப்படம் எடுத்த பின்பே கதையை விவரிக்க தொடங்கினேன். அவருக்கு கதை பிடித்திருந்தது. இசையமைக்க ஒப்புக்கொண்டார். அதன் பிறகு ஐந்து பாடல்கள் ‘கோப்ரா’விற்காக வழங்கி இருக்கிறார். ஒவ்வொன்றும் அற்புதமானது. அவருடன் இணைந்து பணியாற்றிய ஒவ்வொரு தருணங்களும் மறக்க இயலாதவை. அவரின் பேரன்பை கண்டு வியந்திருக்கிறேன். பின்னணி இசையில் நீங்கள் நிகழ்த்தி இருக்கும் மாயஜால தருணத்திற்காகக் காத்திருக்கிறேன்.

இர்ஃபான் பதான், அவரை சந்தித்து கதையை சொன்னபோது, என்னால் நடிக்க முடியுமா? எனக் கேட்டார். உங்களால் முடியும் என்று நம்பிக்கை அளித்தேன் அத்துடன் அவருக்காக தமிழ் மொழி பயிற்சியாளர் ஒருவரை நியமித்து, தமிழை எப்படி உச்சரிக்க வேண்டும் என்று கற்பித்தோம். உடன் நடிப்பு பயிற்சியையும் அளித்தோம். சில தினங்களிலேயே தமிழ் மொழி உச்சரிப்பை தெளிவாக உச்சரித்து நடித்து அசத்தினார்.

‘இமைக்கா நொடிகள்’ படத்தில் இயக்குநர் அனுராக் காஷ்யப் அவர்களை வில்லனாக நடிக்க வைத்திருந்தேன். இந்த படத்தில் மலையாள நடிகர் ரோஷன் மேத்யூ அவர்களை வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க வைத்திருக்கிறேன். இவரும் வித்தியாசமாகவேயிருப்பார். அனுராக் காஷ்யப் கதாப்பாத்திரத்தை விட பல மடங்கு வலிமையானது. என்னுடைய படங்களில் எப்போதும் வில்லனுக்கு தனி முக்கியத்துவம் அளித்து திரைக்கதையை எழுதுவேன்.

படத்தில் நாயகனான விக்ரமை சந்தித்து கதையை விவரித்த போது, மௌனமாக கேட்டார். படப்பிடிப்பு தளத்தில் நான் எந்த காட்சியை விவரித்தாலும், என் எதிர்பார்ப்பை கடந்து, அந்த காட்சியை வியக்கும் அளவிற்கு நடிப்பார். அவரின் நடிப்பு திறமையை கண்டு எனக்குள் சிறிய பொறாமையே ஏற்படும். நான் 50 சதவீத அளவிற்கு நேர்த்தியை எதிர்பார்த்தால்... அவர் 100% அளித்து அசத்துவார். படப்பிடிப்பு தளத்தில் எனக்கும், அவருக்கும் இடையே சிறிய போட்டியே நடைபெறும். அதில் அவரே வெற்றி பெறுவார். அப்படியொரு ஒரு பர்ஃபெக்ஸனிஸ்ட்" என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x