Published : 08 Jul 2022 11:38 PM
Last Updated : 08 Jul 2022 11:38 PM

‘எம்ஜிஆர் எங்களுக்காக விட்டுச் சென்றுள்ளார்’ - ‘பொன்னியின் செல்வன்’ விழாவில் இயக்குநர் மணிரத்னம்

நானே பொன்னியின் செல்வனை படமாக எடுப்பதற்கு மூன்று முறை முயற்சி செய்திருக்கிறேன் என இயக்குநர் மணிரத்னம் தெரிவித்துள்ளார்.

கல்கியின் 'பொன்னியின் செல்வன்' நாவலை இயக்குநர் மணிரத்னம் படமாக்கியிருக்கிறார். இந்தப் படத்தில் ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், பிரகாஷ்ராஜ், பிரபு, ரகுமான், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படம் இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ளது. வரலாற்று நாவலை தழுவி உருவாகும் இப்படத்தை லைகா நிறுவனம் வழங்க, மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என 5 மொழிகளில் வெளியாகும் இப்படத்திற்கு ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார். முதல் பாகம் செப்டம்பர் 30-ம் தேதி வெளியாகிறது. இதனிடையே படத்தின் ஒவ்வொரு கதாபாத்திரத்தின் தோற்றமும் போஸ்டர்களாக வெளியிடப்பட்டுவந்தன. தொடர்ந்து இன்று படத்தின் டீசர் வெளியானது. முன்னதாக, வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் படத்தின் நட்சத்திரங்கள் கலந்துகொண்டனர்.

விழாவில் பேசிய இயக்குநர் மணிரத்னம், "அனைவருக்கும் வணக்கம். எனது முதல் நன்றி கல்கிக்கு நான் கல்லூரி செல்ல ஆரம்பித்த போது பொன்னியின் செல்வனைப் படித்தேன். அன்றிலிருந்து அது என் மனதை விட்டு போகவில்லை. கிட்டத்தட்ட 40 வருடங்களுக்கு மேலாகிவிட்டது. இந்தப்படம் மக்கள் திலகம் எம்ஜிஆர் செய்திருக்கவேண்டிய படம். நாடோடி மன்னன் படத்திற்கு பிறகு அவர் பொன்னியின் செல்வன் படம் நடிப்பதாக இருந்தது. ஏதோ ஒரு காரணத்தால் அந்தப்படம் நின்று விட்டது. இன்றுதான் எனக்கு அந்தப் படம் ஏன் நின்றது எனப் புரிந்தது. எங்களுக்காக எம்ஜிஆர் இந்தப் படத்தை விட்டுவிட்டுச் சென்றிருக்கிறார்.

இந்தப்படத்தை எடுக்க பலபேர் முயற்சி செய்திருக்கிறார்கள். 1980களில் ஒரு முறை, 2000, 2010 என நானே பொன்னியின் செல்வனை படமாக எடுப்பதற்கு மூன்று முறை முயற்சி செய்திருக்கிறேன். அதனால் இது எவ்வளவு பெரிய பொறுப்பு என்பது எனக்குத் தெரியும். எல்லோராலும் பொன்னியின் செல்வன் நேசிக்கப்படுகிறது என்பதும் தெரியும். நாவலைப் படித்தவர்கள் எல்லாம் அதில் தேர்ந்தவர்களாக இருப்பார்கள். நாவல் மீது பொசஷிவுடன் இருப்பார்கள். நானும் அவர்களைப் போல தான்.

ஆனாலும் நான் இந்த கலைஞர்களின் (நடிகர்கள்) உதவி இல்லாமலும், ரவிவர்மன், ரஹ்மான், தோட்டாதரணி, ஷீரிகர் பிரசாத், ஜெயமோகன், இளங்கோ கிருஷ்ணன் போன்ற ஒவ்வொருவரின் உதவி இல்லாமலும் நான் இதனைச் செய்திருக்க முடியாது. முக்கியமாக இந்த கரோனா காலத்தில் எல்லா பிரச்சினைகளுக்கும் இடையில் படப்பிடிப்பில் பிபிகிட் அணிந்து தான் வேலை நடந்தது. லாக் டவுனுக்கு இடையில் இடையில் பண்ண வேண்டிய படமாக இது மாறி விட்டது. அதை எல்லாம் தாங்கிக் கொண்டு, என்னைப் பொறுத்துக் கொண்டு கூட பயணம் செய்ததற்கு நன்றி. தேங்க்யூ ஏஆர்.." என்று முடித்துக்கொண்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x