Published : 26 Jun 2022 05:06 PM
Last Updated : 26 Jun 2022 05:06 PM

'எனது அறியாமையை உணர்கிறேன்' - பஞ்சாங்கம் விவகாரத்தில் மாதவன் கருத்து

'நான் இந்த விமர்சனங்களுக்கெல்லாம் தகுதியானவன் தான். எனது அறியாமையை உணர்கிறேன்' என நடிகர் மாதவன் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

சென்னையில் 'ராக்கெட்ரி நம்பி விளைவு' படத்தின் செய்தியாளர் சந்திப்பின் போது பேசிய மாதவன், ''அமெரிக்கா, நாசா, ரஷ்யா, சீனா, ஐரோப்பா உள்ளிட்ட நாடுகள் பல முறை 800 மில்லியன், 900 மில்லியன் என கோடிக்கணக்கில் செலவழித்து 30-வது தடவை, 32-வது தடவை தான் செவ்வாய்க்கு செயற்கைக்கோளை அனுப்பி வெற்றி பெற்றார்கள். அதிநவீன இன்ஜின்தொழில்நுட்பத்தின் மூலம் அவர்கள் இந்த வெற்றியைப் பெற்றனர். ஆனால் இந்தியாவிடம் இருக்கும் இன்ஜின் மிகவும் சிறியது. அவர்களது விண்கலம் செல்லும் தூரத்தை விட குறைவாகத்தான் செல்லும்.

அப்படியிருக்கும்போது இந்தியா கடந்த 2014-ம் ஆண்டு செவ்வாய்க்கு செயற்கைக்கோளை அனுப்பியது. ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து செவ்வாய் கிரகத்துக்கு விண்கலம் செலுத்தும்போது, 1000 வருடங்களுக்கு முன்பே கணித்து வைத்து செலஸ்டியல் என்ற பஞ்சாங்கம் மூலம் துல்லியமாக மற்ற கிரங்களை எல்லாம் தட்டிவிட்டுட்டு நேரடியாக அனுப்பினார்கள். நம்பி நாராயணின் மருமகன் அருணண் தான் மங்கள்யான் (செவ்வாய்) திட்டத்தின் இயக்குநராக இருந்தவர்.

அவர், பஞ்சாங்கம் வானியல் வழிமுறை வரைபடத்தைப் பார்த்து ஈர்ப்பு விசையை பயன்படுத்தி மைக்ரோ செகண்ட்டில் செவ்வாய்க்கு இஸ்ரோ செயற்கைக்கோளை அனுப்பினார். அது வெற்றிகரமாகத் தனது வேலையைச் செய்தது.மின்சாரம் இல்லாமல், சின்ன பட்ஜெட்டில் செயற்கைகோள் அனுப்பப்பட்டதற்கு காரணம் இந்த பஞ்சாங்கம் தான்'' என்று தெரிவித்திருந்தார்.

மாதவனின் இந்த கருத்து சமூக வலைதளங்களில் கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. நெட்டிசன்கள் பலரும் அவரை ட்ரால் செய்தனர். இந்த நிலையில் தனியார் ஆங்கில ஊடகத்தில் மாதவனை பலர் கேலி செய்வதாக வெளியான செய்தியை ட்விட்டரில் நடிகர் மாதவனே ரீட்வீட் செய்து இதற்கு தான் தகுதியானவன் என்று குறிப்பிட்டு இருக்கிறார். இதுகுறித்து அவர் தனது பதிவில், "அல்மனாக்கை தமிழில் பஞ்சாங்கம் என்று அழைத்த நான் இதற்கெல்லாம் (விமர்சனங்களுக்கு) தகுதியானவன்தான். எனது அறியாமையை உணர்கிறேன். அதே நேரம் இவையெல்லாம் வெறும் 2 எஞ்சின்களை வைத்து செவ்வாய் கிரகத்துக்கு நாம் செயற்கைகோள் அனுப்பியதை மாற்றிவிடாது. அது ஒரு சாதனை. விகாஸ் எஞ்சின் ஒரு ராக்ஸ்டார்." என்று பதிவிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x