Published : 22 Jun 2022 01:07 AM
Last Updated : 22 Jun 2022 01:07 AM

'எல்லாம் நேற்று நடந்தது போல் உள்ளது' - திரைப்பயணத்தில் 19 ஆண்டுகள் நிறைவுசெய்த ஜெயம் ரவி நெகிழ்ச்சி

அண்ணனின் 'ஜெயம்' என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் வெற்றியான நடிகராக அறிமுகமானவர் ஜெயம் ரவி. பல நல்ல படைப்புகளை கொடுத்து தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத முன்னணி நடிகர்களில் உருவெடுத்துள்ளார். அவர் சினிமாவில் நுழைந்தது இன்றோடு 19 ஆண்டுகள் நிறைவடைகிறது. இதையடுத்து திரைப்பயணத்தில் தனக்கு உதவியவர்களுக்கு நன்றி தெரிவித்து ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், "எல்லாம் நேற்று தான் நடந்தது போல் இருக்கிறது. என் முதல் படமான ஜெயம் படத்துக்குக்காக முதல்முறையாக கேமராவை எதிர்கொண்ட நினைவு இன்னும் என் நினைவில் இருக்கிறது. இன்று நான் 19 வருடங்களை நிறைவு செய்துள்ளேன். இது ஒரு மேஜிக் போல் தெரிகிறது. இந்த திரைப்பயணத்தின் பின்னணியில் படைப்பாளிகள் மற்றும் வித்தகர்கள் பலர் உள்ளனர். நான் ஒரு நடிகன். அவர்கள் பார்வையை திரையில் மொழிபெயர்த்த ஒரு ஊடகம் மட்டுமே. எனது திறமை மற்றும் ஆர்வத்திற்கு முழு ஆதரவாக எனது தந்தை இருந்துள்ளார்.

ஒரு நடிகராக இருபப்தற்கான எனது திறனை நான் சுயமாக உணரும் முன்பே, எனக்கு அவர் அடையாளம் காட்டினார். உணர்வுபூர்வமான தருணங்களில் ஆதரவாக இருந்த என் அம்மா தான் என் முதுகெலும்பு. எனது மூத்த சகோதரர் ராஜ எப்போதும் ஒரு வெற்றிகரமான நடிகராக என்னை கற்பனை செய்து, அவரது முத்திரை கையால் என்னை நட்சத்திரமாக மிளிர்ச் செய்தார். என்னுடைய முதல் விமர்சகரும் நண்பருமான என் மனைவி ஆர்த்திக்கு நன்றி.

என் உத்வேகத்தின் ஆதாரமாக இருந்த திரைத்துறையில் உள்ள எனது மூத்த நடிகர்களுக்கு நன்றி. அவர்களின் இடைவிடாத ஆற்றல், தீராத ஆர்வம் மற்றும் அவர்களின் தொழிலின் மீதான முழுமையான அர்ப்பணிப்பு ஆகியவை தான் என்னை மிகவும் உந்துதலாக வைத்திருக்கின்றன. ஒவ்வொரு படத்திலும் நான் பெரிய உயரத்தை எட்டிப்பிடிக்க வேண்டும் என்று தீவிரமாக விரும்பிய தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், சக நடிகர்கள், தொழில்துறை நண்பர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு நன்றி.

எனது சிறந்த படைப்புகளை பாராட்ட தவறாத, அதே நேரத்தில் அவர்களின் நேர்மறையான விமர்சனங்களால் எனது வாழ்க்கையை மேம்படுத்த உதவிய ஊடகத் துறையை சேர்ந்த அனைவருக்கும் எனது நன்றி. ரசிகர்களின் நிபந்தையற்ற அன்பும், ஆதரவும் எனது திறமையை வளர்த்ததோடு மட்டுமில்லாமல், சிறந்த படைப்புகளை வழங்குவதற்கு நிறைய பொறுப்புகளை என்னுள் விதைத்துள்ளது." இவ்வாறு ஜெயம் ரவி நெகிழ்வாக குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x