Published : 12 Jun 2022 04:24 PM
Last Updated : 12 Jun 2022 04:24 PM

துபாய் எக்ஸ்போவில் இளையராஜா முதல் அனிருத் வரை கலந்துகொள்ள ஏ.ஆர்.ரஹ்மான் தான் காரணம் - யுவன்சங்கர் ராஜா

துபாய் எக்ஸ்போவில் இளையராஜா உள்ளிட்ட இசைக் கலைஞர்கள் இசை நிகழ்ச்சி நடத்தியதற்கு ரஹ்மானே காரணம் என யுவன்சங்கர் ராஜா தெரிவித்துள்ளார்.

கடந்த மார்ச் மாதம் 'துபாய் எக்ஸ்போ 2020' நிகழ்ச்சியில் துபாயில் கோலாகலமாக நடைப்பெற்றது. இதில், இளையராஜா, ரஹ்மான், யுவன் உள்ளிட்ட இந்திய நட்சத்திரங்கள் கலந்துகொண்டு இசை நிகழ்ச்சியை நடத்தினர். துபாய் எக்போவில், தான் இசை நிகழ்ச்சியை அரங்கேற்ற உள்ளது குறித்து அப்போது இளையராஜா தனது ட்விட்டர் பக்கத்தில், ''வணக்கம் துபாய் எக்ஸ்போ 2020. இந்த கச்சேரியில் வந்து, நீங்கள் அனைவரும் விரும்பும் இசையால் நிரம்பிய பயணத்திற்கு, உங்களை அழைத்துச் செல்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

மார்ச் 5-ஆம் தேதி இரவு 9 மணிக்கு, ஜூபிலி பார்க்கில் என்னுடன் கலந்து கொள்ளுங்கள்' என்று பதிவிட்டிருந்தார். துபாய் எக்ஸ்போ நிகழ்ச்சியில் இதன் ஒரு பகுதியாக ஏ.ஆர்.ரஹ்மான் ஸ்டுடியோவிற்கு இளையராஜா சென்று இருவரும் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டனர்.

இந்த நிலையில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், துபாய் எக்ஸ்போ நிகழ்ச்சி குறித்து பேசும்போது, ''நாங்கள் அங்கே இசை நிகழ்ச்சி நடத்தியதற்கு காரணம் ஏ.ஆர்.ரஹ்மான்தான். என் ஊரில் இருக்கும் இசைக் கலைஞர்கள் வந்து இசை நிகழ்ச்சி நடத்த நீங்கள் ஒத்துக்கொண்டால் நான் வந்து இசை நிகழ்ச்சி நடத்துகிறேன் என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் ரஹ்மான் சொன்னார்.

மேலும் நீங்கள் ஷகிரா போன்ற இசைக் கலைஞர்களை அழைத்து வருகிறீர்கள். எங்கள் ஊரிலும் சிறந்த இசைக் கலைஞர்கள் இருக்கிறார்கள். என் அப்பா (இளையராஜா) பெயர், என் பெயரை, அனிருத் பெயரை ரஹ்மான்தான் சொல்லியிருக்கிறார். அதன் பிறகு எக்ஸ்போ சென்று இசை நிகழ்ச்சி நடத்தினோம்'' என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x