Published : 07 Jun 2022 06:10 PM
Last Updated : 07 Jun 2022 06:10 PM

'டான்' படத்தில் நாயகனாக நடிக்க மறுத்தது ஏன்? - உதயநிதி ஸ்டாலின் விளக்கம்

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான 'டான்' திரைப்படம் தான் நடிக்க இருந்த திரைப்படம் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அறிமுக இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த திரைப்படம் 'டான்'. பிரியங்கா மோகன், எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி உட்பட பலரும் இந்தப் படத்தில் நடித்திருந்தனர். லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரித்த இந்தப் படத்துக்கு அனிருத் இசை அமைத்திருந்தார். இந்தப் படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியிட்டது.

ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றதையடுத்து, இந்தப் படத்தின் வெற்றி விழாக் கொண்டாட்டம் சென்னையில் நடைபெற்றது. இதில் லைகா நிறுவனர் சுபாஷ்கரன், சிவகார்த்திகேயன், படத்தை வெளியிட்ட உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய உதயநிதி ஸ்டாலின், ''அப்பா- மகன் உறவை நெகிழ்ச்சியாக கூறியதால் இந்தப் படம் நிச்சயமாக வரவேற்பை பெறும் என்று படம் பார்த்ததும் சொன்னேன். அது நடந்திருக்கிறது. படம் வெற்றி பெற்றுவிட்டதால், சில உண்மைகளை சொல்லலாம் என நினைக்கிறேன். 'சிவகார்த்திகேயன் அவர்களே.. இந்தப் படம் வேற ஒரு ஹீரோ கதைகேட்டு நிராகரித்தப் படம். அந்த ஹீரோ யாருன்னு தெரியுமா?' அது நான்தான்.

இது நான் நடிக்க வேண்டிய படம். கதை பிடித்திருந்தது. இருந்தாலும் நான் வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். காரணம், இதில் பள்ளி மாணவராக நடிக்க வேண்டிய காட்சிகள் இருந்தது. அதில் என்னால் நடித்திருக்க முடியாது. அதனால் நான் நடிக்கவில்லை. அதேபோல படத்தின் க்ளைமேக்ஸ் காட்சியையும் என்னால் சரிவர செய்திருக்க முடியாது. யார், யார் எதை செய்ய வேண்டுமோ அவர்களுக்கு அது சரியாக அமைந்திருக்கிறது'' என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x