Published : 31 May 2022 05:04 PM
Last Updated : 31 May 2022 05:04 PM

“இனி புகைப் பிடிக்கும் காட்சிகளில் நடிப்பதை தவிர்ப்பேன்” - நடிகர் அருண் விஜய் 

'புகைப் பிடிக்கும் காட்சிகளில் நடிப்பதை தவிர்த்துக் கொள்வேன்' என நடிகர் அருண்விஜய் தெரிவித்துள்ளார்.

இயக்குநர் ஹரி இயக்கத்தில் நடிகர் அருண்விஜய் நடிக்கும் திரைப்படம் 'யானை'. இந்தப் படத்தில் பிரியா பவானி சங்கர் நாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன், சமுத்திரக்கனி, ராமச்சந்திர ராஜு (கே.ஜி.எஃப் வில்லன் - கருடன்), யோகி பாபு, ராதிகா, புகழ், அம்மு அபிராமி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளம் இதில் நடித்துள்ளது.

ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். கோபிநாத் ஒளிப்பதிவு செய்துள்ளார்.இந்தத் திரைப்படம் ஜுன் 17-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்நிலையில், இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியிட்டு விழாவில் பேசிய இயக்குநர் ஹரி, ''நானும், அருண் விஜய் இணைந்து பணியாற்ற வேண்டும் என பல ஆண்டுகளாக விரும்பினோம். அது அமையவில்லை.

இந்த கதை நாங்கள் இணைய மிக முக்கியமான காரணமாக இருந்தது. கடந்த 3 வருடங்கள் எனக்கு நிறைய கற்று கொடுத்தது இந்தப் படம். படத்தை கொஞ்சம் வேற மாதிரி எடுக்க விரும்பினேன். பல மொழி இயக்குநர்களிடம் பல விஷயத்தை கற்றுகொண்டேன், பின்னர் இந்தப் படத்தை இயக்கியுள்ளேன். சேவல் படத்திற்கு பிறகு ஜிவியுடன் பணி புரிந்துள்ளேன். படத்தில் நடித்துள்ள நடிகர்கள் பெரும் ஒத்துழைப்பு கொடுத்தனர்.

படத்தில் நிறைய ரிஸ்க்கான காட்சிகள் இருந்தது. எல்லோரும் இணைந்து ஒத்துழைத்து பணியாற்ற வேண்டிய காட்சிகள் இருந்தது, அனைவரும் முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றியுள்ளனர். நான் தாமிரபரணி, ஐயா படம் எடுத்த போது பின்பற்றிய வழிமுறைகளை பின்பற்றி இப்படம் எடுத்துள்ளேன். சமுத்திரகனி ஒரு உதவி இயக்குனர் போல் வேலை பார்த்தார். அது எனக்கு மிக உதவியாக இருந்தது. எனது ஆரம்ப கால கட்ட படங்கள் போல் இப்படம் இருக்கும்'' என்று தெரிவித்துள்ளார்.

நடிகர் அருண் விஜய் பேசுகையில், ''நானும், இயக்குனர் ஹரியும் நீண்ட நாளாக பணியாற்ற விரும்பினோம். இந்தப் படத்தை உருவாக்க பெரிய தைரியம் வேண்டும். சுற்றியுள்ளவரை பாதுகாக்கும் ஒரு கதாபாத்திரம் தான், எனது கதாபாத்திரம். இந்தப் படத்தில் நிறைய சவால்கள் இருந்தது. நீண்ட நாள் கழித்து கிராமம் தொடர்புடைய படத்தில் நடித்துள்ளேன். படத்தின் ஆக்‌சன் பெரிய சவாலாக இருந்தது. எனக்கு அடிபட்டது, அதையும் மீறி படத்தை எடுத்து முடித்தோம்.

கண்டிப்பாக படம் பேசப்படும் என நம்புகிறோம். படத்தில் பல காட்சிகளை நான் உணர்ந்து அந்த பாத்திரமாக மாறி நடித்தேன். இந்தப் படம் காமெடி நிறைந்த, பொழுதுபோக்கு திரைப்படம்'' என்று பேசினார். அப்போது அவரிடம், புகைப்பிடிக்கும் காட்சிகள் போஸ்டரில் இடம்பிடித்திருப்பது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, ''இந்தப் படத்தின் காட்சிக்குத் தேவை என்பதால் அது இடம்பெற்றுள்ளது. இனிவரும் காலங்களில் அது போன்ற காட்சிகளை தவிர்க்கவுள்ளேன்'' என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x