Published : 26 May 2022 09:01 PM
Last Updated : 26 May 2022 09:01 PM

“ரஜினி, கமலுக்காக ஒரு ஸ்கிரிப்ட் வைத்திருக்கிறேன்” - இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன்

'ரஜினி, கமல் இருவருக்கும் பிடிக்கும் வகையான கதைக்களத்தை வைத்திருக்கிறேன். அந்தக் கதையைக் கேட்டால் நிச்சயம் அவர்களுக்கு பிடிக்கும்' என ‘பிரமேம்’ பட இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் தெரிவித்துள்ளார்.

சாய் பல்லவி - நிவின் பாலி நடிப்பில் கடந்த 2015-ம் ஆண்டு வெளியான 'பிரேமம்' படம் மலையாள ரசிகர்களைக் கடந்து பல்வேறு தரப்பு மக்களிடையேயும் நல்ல வரவேற்பை பெற்றது. அந்தப் படத்தை அல்போன்ஸ் புத்திரன் இயக்கியிருந்தார். தற்போது அவர், பிரித்விராஜ் மற்றும் நயன்தாரா நடிப்பில் 'கோல்ட்' படத்தை இயக்கி முடித்திருக்கிறார். இந்தப் படத்தின் ட்ரெய்லர் அண்மையில் வெளியானது. படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.

இந்நிலையில், 'விக்ரம்' படத்தின் 'போர்கொண்ட சிங்கம்' பாடலை தனது பேஸ்புக் பக்கத்தில் 'நல்ல பாடல்' என தலைப்பிட்டு ஷேர் செய்திருந்தார். அவரது அந்தப் பதிவில் கமென்ட் செய்திருந்த ரசிகர் ஒருவர், நடிகர் ரஜினியை வைத்து படம் எடுப்பீர்களா? என கேட்டிருந்தார்.

அதற்கு பதிலளித்திருந்த அல்போன்ஸ் புத்திரன், 'ரஜினி அல்லது கமலை நான் தனியாக சந்தித்தால் அவர்கள் இணைந்து நடிக்கும் படியான ஸ்கிரிப்ட் ஒன்றை வைத்திருக்கிறேன். கதை கேட்டால் அவர்களுக்கு நிச்சயம் பிடிக்கக் கூடும். ஆனால், அதற்கான அதிர்ஷ்டம் எனக்கு இன்னும் அமையவில்லை. அதனால், இன்னும் அவர்களை என் வாழ்க்கையில் இன்றைய தேதி வரை சந்திக்காமல் இருக்கிறேன்.

இனி வரும் காலத்தில் ஒருவேளை அவர்களை சந்திக்கும் வாய்ப்பு அமைந்து அவர்களுக்கும் என் கதை பிடித்துவிட்டது என்றால், என்னுடைய எல்லா திறமைகளையும் நான் உபயோகித்து நல்லதொரு பொழுதுபோக்கு படமாக அமைய என் குழுவுடன் கடினமாக உழைப்பேன். நிச்சயம் அந்த திரைப்படம் ரஜினி, கமல் இருவருக்கு மட்டுமல்ல அவருடைய ரசிகர்களுக்கும் மிக பிடித்த ஒன்றாக அமையும்" என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x