Published : 25 May 2022 04:54 AM
Last Updated : 25 May 2022 04:54 AM

வயிற்றில் ரத்தக் கசிவால் பாதிக்கப்பட்டுள்ள டி.ராஜேந்தருக்கு வெளிநாட்டில் சிகிச்சை - நடிகர் சிலம்பரசன் தகவல்

சென்னை: வயிற்றில் லேசான ரத்தக் கசிவால் பாதிக்கப்பட்டுள்ள நடிகர் டி.ராஜேந்தரை உயர் சிகிச்சைக்காக வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்வதாக அவர் மகன் சிலம்பரசன் தெரிவித்துள்ளார்.

நடிகரும், இயக்குநருமான டி.ராஜேந்தருக்கு கடந்த சிலநாட்களுக்கு முன்பு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதை அடுத்து, சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது. மேல் சிகிச்சைக்காக அவரை சிங்கப்பூர் அழைத்துச் செல்வது குறித்து ஆலோசித்து வருவதாகச் செய்திகள் வெளியாகின. இதையடுத்து, அவர் விரைவில் நலம்பெற பிரார்த்திப்பதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில், டி.ராஜேந்தரின் மகனான நடிகர் சிலம்பரசன் ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

மருத்துவர்கள் அறிவுறுத்தல்

என் தந்தை டி.ராஜேந்தருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்ட நிலையில், அவரை தனியார் மருத்துவமனையில் சேர்த்தோம்.

பரிசோதனையில், அவரது வயிற்றில் சிறிய அளவில் ரத்தக் கசிவு ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. இதனால், அவருக்கு உயர் சிகிச்சை தரவேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தினர். இதையடுத்து, அவரது உடல் நலன் கருதியும், உயர் சிகிச்சைக்காகவும் தற்போது வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்கிறோம்.

அவர் முழு சுய நினைவுடன் நலமாக உள்ளார். கூடிய விரைவில் சிகிச்சை முடிந்து உங்கள் அனைவரையும் சந்திப்பார். உங்கள் பிரார்த்தனைகளுக்கும், அன்புக்கும் நன்றி.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x