Published : 17 May 2022 03:23 PM
Last Updated : 17 May 2022 03:23 PM

கமலை நாடும் ராஜமௌலி? - மகேஷ்பாபு படத்தில் நடிக்க வாய்ப்பு என தகவல்

மகேஷ்பாபுவை வைத்து புதிய படத்தை இயக்கும் ராஜமௌலி, அந்தப் படத்தில் கமலையும் நடிக்க வைப்பது குறித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ராஜமெளலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், அஜய் தேவ்கன், ஆலியா பட், ஸ்ரேயா, சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'ஆர்ஆர்ஆர்'. டிவிவி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்த இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என 5 மொழிகளிலும் வெளியாகி சர்வேச அளவில் கவனம் ஈர்த்தது. தவிர, உலகம் முழுக்க ரூ.1000 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது.

இந்த படத்தைத் தொடர்ந்து ராஜமௌலி இயக்கும் புதிய படத்தில் மகேஷ்பாபு நடிக்க உள்ளார். இந்தப் படம் காடுகளை மையமாக கொண்டு எடுக்கப்படவுள்ளதாகவும் வழக்கம்போல மிகவும் பிரம்மாண்டமான வகையில் படம் 500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக உள்ளதாகவும் கூறப்பட்டது. ஆப்பிரிக்கக் காடுகளில் படப்பிடிப்பு நடத்தப்படும் எனவும் தகவல் வெளியானது. இந்த ஆண்டின் இறுதியில் படத்தின் சூட்டிங் துவங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில், இந்தப் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் கமல்ஹாசனை நடிக்க வைக்க இயக்குநர் ராஜமௌலி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது. ஆனால் இன்னும் எதுவும் முடிவாகவில்லை. இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்புக்காக ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். இதனிடையே கமல் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'விக்ரம்' திரைப்படம் வரும் ஜூன் 3-ம் தேதி திரையரங்குளில் வெளியாக உள்ளது. தொடர்ந்து, பா.ரஞ்சித், மகேஷ் நாராயணன் படங்களில் அவர் நடிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x