Published : 17 May 2022 05:40 AM
Last Updated : 17 May 2022 05:40 AM

தாய்மொழியை விட்டுத்தர மாட்டோம்: ‘விக்ரம்’ இசை வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன் பேச்சு

பட உதவி - ட்விட்டர்

சென்னை: நாம் விரும்புகிற மொழியை படிப்போம், ஆனால், தாய்மொழியை விட்டுக்கொடுக்க மாட்டோம் என்று நடிகர் கமல்ஹாசன் கூறினார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள படம், ‘விக்ரம்’. இதில் விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், காயத்ரி சங்கர் உட்பட பலர் நடித்துள்ளனர். சிறப்பு தோற்றத்தில் சூர்யா நடித்துள்ளார். அனிருத் இசையமைத்துள்ளார். கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜூன் 3-ம் தேதி வெளியாக உள்ள இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் கமல்ஹாசன் பேசியதாவது:

சினிமாவும் அரசியலும்

தமிழகத்தில் சினிமாவும், அரசியலும் ஒட்டிப் பிறந்தவை. இரண்டையும் பிரிக்க முடியாது. நான் முழுமையான அரசியல்வாதியும் இல்லை, முழு நேர நடிகனும் இல்லை. அரசியல் களத்தில் புது நாகரிகத்தை கொண்டுவர அரசியலுக்கு வந்தேன்.

அனைவரும் மொழி குறித்து பேசுகின்றனர். இந்தியாவின் சிறப்பே பன்முகம்தான். எனக்கு தமிழும் சரி, இந்தியும் சரி, சுமாராகத்தான் வரும். எந்த மொழியையும் ஒழிக என்று சொல்ல மாட்டேன். ஆனால், தமிழ் வாழ்க என்று சொல்வது என் கடமை. நாம் விரும்புகிற மொழியை படிப்போம், ஆனால், தாய்மொழியை விட்டுக்கொடுக்க மாட்டோம். தமிழை தடுப்பவர்கள் யாராக இருந்தாலும் எதிர்த்து போராடுவோம்.

தியேட்டரில் கூட்டம் குறையாது

டிஜிட்டல் வந்ததால் தியேட்டர் கலாச்சாரம் ஒழிந்துவிடும் என்கின்றனர். ஓடிடி வருவதால் திரையரங்குகளில் கூட்டம் குறையாது. வீட்டு காலண்டரில் வெங்கடாசலபதி படம் வைத்திருப்பதால், திருப்பதியில் கூட்டம் குறைந்துவிடாது. நல்லவற்றை எப்போதும் ஏற்க வேண்டும்.

படத்தை ரெட் ஜெயண்ட் வெளியிடுவது பற்றி பலரும் கேட்டார்கள். ஸ்டாலின் எனக்கு அரசியல் தாண்டிய நண்பர். கலைஞரிடம் ஆரம்பித்த உறவு, அவரது பேரன் உதயநிதி வரை தொடர்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில் உதயநிதி ஸ்டாலின், சிம்பு, விஜய் சேதுபதி, அனிருத், பா.ரஞ்சித், ஐசரி கணேஷ், ராதிகா, லிஸி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x