Published : 08 May 2022 01:52 PM
Last Updated : 08 May 2022 01:52 PM

'என்னுடைய எல்லாமே நீ தான்!' - அன்னையர் தினத்தில் காஜல் அகர்வால் நெகிழ்ச்சி

'என்னுடைய எல்லாமே நீ தான்; எனக்கு எல்லையில்லாத பல விஷயங்களைக் கற்றுக்கொடுத்தாய். உனக்கு தாயானதில் பெருமை கொள்கிறேன்' என நடிகை காஜல் அகர்வால் தனது குழந்தை குறித்து உருக்கமான பதிவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எழுதியுள்ளார்.

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை காஜல் அகர்வால், கடந்த 2020ஆம் ஆண்டு தொழிலதிபரான கவுதம் கிச்சலு என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவருக்கு, கடந்த ஏப்ரல் மாதம் ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில், அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது மார்போடு தாங்கிய நிலையில் குழந்தையின் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். கூடவே, உருக்கமான பதிவொன்றையும் எழுதியிருக்கிறார்.

அதில் ''நீ எனக்கு எவ்வளவு முக்கியமானவன் என்பதை நான் உணர்ந்துகொண்டேன். உன்னை என் கைகளில் தாங்கிய அந்தத் தருணம், உன்னுடைய அந்தச் சிறிய கைகள், உன்னுடைய அந்தச் சூடான மூச்சு, உன்னுடைய அந்த அழகிய கண்களைக் கண்டபோது, அன்பை உணர்ந்துகொண்டேன். நீ என் முதல் குழந்தை. முதல் மகன். என்னுடைய எல்லாமே நீ தான். காலம் வரட்டும் தாயாக பல்வேறு விஷயங்களை உனக்குக் கற்றுத் தருவேன். ஆனால் நீ எனக்கு ஏற்கெனவே எல்லையில்லாத பல்வேறு விஷயங்களை கற்றுக்கொடுத்துவிட்டாய். தாய்மை என்றால் என்ன என்பதை எனக்கு சொல்லிக்கொடுத்துவிட்டாய்.

சுயநலமற்றவளாக இருக்கக் கற்றுக்கொடுத்தாய். என் இதயத்தின் ஒரு பகுதி என் உடலுக்கு வெளியே இருப்பதை எனக்கு சொல்லிக்கொடுத்தாய். நீ என் சூரியன், என் சந்திரன், என் நட்சத்திரங்கள் அனைத்தும் நீதான். அதை நீ என்றும் மறந்துவிடாதே. உனக்கு அன்னையானதில் பெருமிதம் கொள்கிறேன்'' எனக் குறிப்பிட்டுள்ளார். அன்னையர் தினத்தையொட்டி அவர் வெளியிட்டுள்ள இந்தப் பதிவு வைரலாகி வருகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x