Published : 02 May 2022 10:16 PM
Last Updated : 02 May 2022 10:16 PM

'கான், குமார் நடிகர்களின் படங்களில் நடிக்க மறுத்தேன்' - காரணம் அடுக்கிய கங்கனா ரனாவத்

மும்பை: 'நான் பெரிய ஹீரோக்களின் படங்களில் நடிக்கும் வாய்ப்பை மறுத்தேன்' என தெரிவித்துள்ளார் இந்திய நடிகை கங்கனா ரனாவத்.

இந்திய திரை நட்சத்திரங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை கங்கனா ரனாவத். இவர் பெரும்பாலும் இந்தி மொழி படங்களில் நடிப்பது வழக்கம். தமிழிலும் தாம் தூம், தலைவி போன்ற படங்களில் நடித்துள்ளார். சமயங்களில் இவரது கருத்துகள் அரசியல் ரீதியாகவும் அதிர்வலைகளை எழுப்பும். அண்மையில் உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்தை சந்தித்திருந்தார். அது குறித்து சமூக வலைதளத்திலும் பதிவு செய்திருந்தார்.

இந்நிலையில், தனது தனித்துவமான திரைப்பயணம் குறித்து பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார் அவர். அதனை அவர் நடிப்பில் விரைவில் வெளிவரவுள்ள தாகத் (Dhaakad) படத்தின் புரொமோஷன் பணியின்போது பகிர்ந்துள்ளார்.

"நான் ஆண் கதாப்பாத்திரத்தை மையமாகக் கொண்ட பல படங்களை மறுத்துள்ளேன். இதில் ​​கான் மற்றும் குமார் போன்ற ஹீரோக்களின் படங்களும் அடங்கும். எனக்கான பாதையை நானே அமைத்துக் கொண்டேன். வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடிப்பது எனது நோக்கமாக இருந்தது. அது சாத்தியமாகி உள்ளது. ஆனால் அதை நான் திட்டமிட்டு செய்யவில்லை.

அதேபோல அதை நான் மட்டுமே தனியாகச் செய்துவிட முடியாது. அதற்கு தயாரிப்பாளர்கள், இயக்குநர்களின் உதவி தேவை. ஒரு பெண் வெற்றிகரமாக பயணம் மேற்கொள்ள பல ஆண்கள் அவளுக்கு ஆதரவு கொடுத்துள்ளார்கள் என்று நான் சொல்வேன். இது பல விஷயங்களின் கலவையாகும்.

ஆண் நட்சத்திரங்களுடன் ஒப்பிடும்போது எனக்கு சம்பளத்தில் எதுவும் குறைவு இல்லை என நான் நம்புகிறேன். இந்தப் பயணத்தில் எனக்கு உதவிய ஆண்களின் உதவி எனக்கு அதை உணர்த்தியுள்ளது. முன்பு எனக்கு ஏன் ஹீரோக்களுக்கு நிகரான சம்பளம் இல்லை என நினைத்தது உண்டு. ஆனால், இப்போது ​​மகிழ்ச்சியுடன் எனக்கு சம்பளம் குறைவு இல்லை என நான் சொல்வேன்'' என தெரிவித்துள்ளார் அவர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x