Published : 29 Apr 2022 10:29 PM
Last Updated : 29 Apr 2022 10:29 PM

'நமது தேசிய மொழி சமஸ்கிருதம் என நினைக்கிறேன்' - நடிகை கங்கனா ரனாவத்

நடிகை கங்கனா ரனாவத்.

மும்பை: நமது நாட்டின் தேசிய மொழி இந்தி இல்லை. அது சமஸ்கிருதமாக இருக்கலாம் என தான் நினைப்பதாக நடிகை கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார். தேசிய மொழி குறித்த விவாதம் எழுந்துள்ள நிலையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இமாச்சல பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் 35 வயதான கங்கனா ரனாவத். தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழி படங்களில் இவர் நடித்துள்ளார். சமீப ஆண்டுகளாக இவர் சர்ச்சைக்கு வழிவகுக்கும் வகையிலான கருத்துகளைச் சொல்லி வருகிறார். இந்நிலையில், இந்திய நாட்டின் தேசிய மொழியாக சமஸ்கிருதம் இருக்கக் கூடும் என அவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து "மொழி வாரியாக வேற்றுமை கொண்டுள்ளது இந்தியா. எல்லோரையும் ஒற்றை புள்ளியில் இணைக்க பொதுவான மொழி ஒன்று தேவை. இந்தி தேசிய மொழியாக்கப்பட்டது. ஆனால் டெக்னிக்கலாக பார்த்தால் இந்தியை விட தமிழ் பழமையானது. ஆனால் சமஸ்கிருதம் அதனை காட்டிலும் தொன்மையானது.

கன்னடம், தமிழ், குஜராத்தி, இந்தி போன்ற மொழிகளை விட சமஸ்கிருதம் பழமையானது. இந்த மொழிகள் அனைத்தும் சமஸ்கிருத மொழியிலிருந்து வந்திருக்கலாம். பின்னர் ஏன் நமது நாட்டின் தேசிய மொழியாக சமஸ்கிருதம் இருக்க கூடாது?

தேசிய மொழி எது என என்னைக் கேட்டால், அது இந்தி இல்லை, சமஸ்கிருத மொழியாக இருக்கலாம் என நினைக்கிறேன்" என்று அவர் தெரிவித்துள்ளார். நடிகர்கள் சுதீப் மற்றும் அஜய் தேவ்கன் விவாதத்தில் இரண்டு தரப்பிலும் நியாயம் இருப்பதாக தெரிவித்துள்ளார் கங்கனா.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x