Published : 11 Apr 2022 01:44 AM
Last Updated : 11 Apr 2022 01:44 AM

'தமிழ்தான் இணைப்பு மொழி' - அமித் ஷா குறித்த கேள்விக்கு ஏ.ஆர்.ரஹ்மான் சொன்ன பதில்

சென்னை: "இந்தியைத் தான் இணைப்பு மொழியாக கருத வேண்டும்" என உள்துறை அமைச்சர் கூறியதற்கு பதிலளிக்கும் விதமாக "தமிழ்தான் இணைப்பு மொழி" என இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

சென்னையில் நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் சிஐஐ சார்பில் நடைபெற்ற தென்னிந்திய ஊடக பொழுதுபோக்கு கருத்தரங்கில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணையமைச்சர் எல்.முருகன் கலந்து கொண்டு ரஹ்மானை கவுரவித்தார். நிகழ்ச்சியில் பேசிய ரஹ்மான், நான் சில கருத்துக்களை உங்களுடன் பகிர விரும்புகிறேன்.

ஏழு வருடங்களுக்கு முன்பு மலேசியா சென்றிருந்த போது சந்தித்த சீனாவைச் சேர்ந்த ஒருவர், நீங்கள் இந்தியரா, எனக்கு வட இந்தியர்களை மிகவும் பிடிக்கும், அவர்களின் படங்கள் மிகவும் அருமையாகவும், வடஇந்தியர்களும் அழகாகவும் இருப்பார்கள் என்றார். அவர் தென்னிந்திய படங்களை பார்த்திருக்கிறாரா என்று தெரியவில்லை. ஆனால் அவர் சொன்னது என்னை மிகவும் பாதித்தது. மக்கள் வண்ணங்களால் தங்களின் அடையாளத்தை, கவுரவத்தை நிலைநாட்ட விரும்புகிறார்கள் என்பது என்னுடைய தாழ்மையான கருத்து. நாமும் வண்ணத்தை விரும்புகிறோம். நாம் அதை சிறந்த முறையில் வெளிப்படுத்த வேண்டும். மற்றவர்கள் நம்முடைய படங்களை பார்க்கும் போது தலைநிமிர்ந்து பார்க்க வேண்டும். அப்படி படம் எடுக்க வேண்டும்" என்றார்.

நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்த ஏ.ஆர். ரஹ்மானிடம், இந்தி தான் இணைப்பு மொழி என உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்திருப்பது பற்றி செய்தியாளர்கள் கேட்ட போது, "தமிழ்தான் இணைப்பு மொழி" என கூலாக பதிலளித்தார்.

முன்னதாக, டெல்லியில் நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல் மொழிக் குழுவின் 37வது கூட்டத்தில் பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “நாட்டின் ஒருமைப்பாட்டின் முக்கிய அங்கமாக இந்தியை அலுவல் மொழியாக மாற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது. இந்தியாவின் மொழியான இந்தியை வெவ்வேறு மாநிலங்களில் உள்ள குடிமக்கள் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ள பயன்படுத்த வேண்டும். இந்தியைத்தான் ஆங்கிலத்துக்கு மாற்றாகக் கருத வேண்டும்" என்று தெரிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது சமூக வலைதள பக்கத்தில், ழ என்ற செங்கோலுடன், நடனமாடும் வகையில் வரையப்பட்ட கருப்பு தமிழன்னையின் ஓவியம் ஒன்றை பகிர்ந்திருந்தார். அதில், தமிழணங்கு, "இன்பத்தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு வேர்" என்ற பாரதிதாசனின் வரியும் இடம் பெற்றிருந்தது.

தான் கலந்து கொள்ளும் தேசிய, சர்வதேச நிகழ்ச்சிகளின் மேடைகளில் தமிழ்மொழியை தொடர்ந்து பெருமைபடுத்தி வரும் இசையமைப்பாளர் ரஹ்மானின் "தமிழ்தான் இணைப்பு மொழி" என்ற பதில் வைரலாகி வருகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x