Published : 21 Apr 2016 12:51 PM
Last Updated : 21 Apr 2016 12:51 PM

சிம்பு விலகல் முடிவு: என்ன சொல்கிறது நடிகர் சங்கம்?

நடிகர் சங்கத்தில் இருந்து சிம்பு விலகல் அறிவிப்பு குறித்து, நடிகர் சங்க செயற்குழுவில் விவாதிக்கத் திட்டமிட்டு இருக்கிறார்கள்.

நடிகர் சங்கத்தின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகப்போவதாக சிம்பு அறிவித்திருக்கிறார். விலகலுக்கான காரணம் குறித்து சிம்பு "பீப் பாடல் குறித்து பெரிய சர்ச்சை உண்டானது. ஆனால், அப்பாடலை நான் வெளியிடவே இல்லை. அது குறித்து எனக்கு பிரச்சினையானபோது இந்த நடிகர் சங்கம் எங்கே போனது?

நான் வெளியிடாத பாடலுக்கு பிரச்சினையானபோது நடிகர் சங்கம் ஒரு உறுப்பினருக்கு துணையாக நின்றிருக்க வேண்டும். அதை பண்ணவில்லை.

தற்போது நட்சத்திர கிரிக்கெட் போட்டி என்ற பெயரில் அனைத்து முன்னணி நடிகர்களை அழைத்து கேவலப்படுத்தி விட்டார்கள். இப்படி கேவலப்படுத்தும் நடிகர் சங்கத்தில் நாம் ஏன் உறுப்பினராக இருக்க வேண்டும் எனத் தோன்றியது. ஆகவே நடிகர் சங்கத்தின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகுகிறேன்" என்று தெரிவித்தார் சிம்பு.

நடிகர் சங்கத்தில் இருந்து சிம்பு விலகல் அறிவிப்பு குறித்து நடிகர் சங்க நிர்வாகியிடம் பேசியபோது, "பீப் பாடல் பிரச்சினை குறித்து சிம்பு தரப்பினரிடம் அப்போதே பேசப்பட்டது. ஆனால், அவர்கள்தான் பிரச்சினையை சட்ட ரீதியாக பார்த்துக்கொள்கிறோம் என்று சொன்னார்கள். இப்போது இந்த பிரச்சினை ஏன் மீண்டும் வெடிக்கிறது என்று தெரியவில்லை.

நடிகர் சங்க வரலாற்றில் முதல் முறையாக சிம்பு விலகுகிறேன் என்று தெரிவித்திருக்கிறார். ஒருவர் விலகுகிறேன் என்றவுடன் உடனடியாக கடிதம் வாங்கிக் கொண்டு விலக்குவதற்கு இது பொழுதுபோக்கு கூடம் அல்ல.

மேலும், சிம்புவின் விலகல் கடிதம் இன்னும் வரவில்லை. அக்கடிதம் வந்தவுடன் செயற்குழு கூட்டத்தில் பேசியவுடன் தான் இது குறித்து முடிவு செய்யப்படும்" என்று தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x