Published : 26 Mar 2022 06:15 PM
Last Updated : 26 Mar 2022 06:15 PM

'எங்களின் புதிய பயணத்தில்...' - நிச்சயதார்த்த நிகழ்வுக்குப் பின் ஆதி - நிக்கி கல்ராணி நெகிழ்ச்சி

நடிகர் ஆதிக்கும், நிக்கி கல்ராணிக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.

சில தினங்கள் முன் பேசிய நடிகர் ஆதி, ‘‘லிங்குசாமி இயக்கும் ’வாரியர்’ படத்தில் வில்லனாகவும், ஹன்சிகா, யோகிபாபு, ரோபோ சங்கருடன் ‘பார்ட்னர்’ என்ற நகைச்சுவை படத்திலும் நடிக்கிறேன். என் திருமணம் குடும்பத்தினர் சம்மதத்துடன் கூடிய காதல் திருமணமாக இருக்கும். அதுபற்றி முறையாக அறிவிப்பேன்’’ என்றார்.

இப்போது அவரின் திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. நடிகை நிக்கி கல்ராணியை அவர் கரம்பிடிக்கிறார். நடிகர் ஆதியும், நிக்கி கல்ராணியும் காதலிப்பதாகவும், விரைவில் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் கடந்த சில மாதங்களே செய்திகள் வெளிவந்த வண்ணம் இருந்தன. இதனை உறுதிப்படுத்தி இப்போது நிச்சயதார்த்தம் செய்துள்ளனர்.

நேற்று முன்தினம் இவர்களின் நிச்சயதார்த்த நிகழ்வு நடந்துள்ளது. இதனை இருவரும் தங்கள் சமூக வலைதளப் பக்கங்களில் பதிவு செய்து, "இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நாங்கள் ஒருவரையொருவர் அறிந்துகொண்டோம். இப்போது அதிகாரபூர்வமாக நிச்சயம் செய்துகொண்டுள்ளோம். 24.3.22... இந்த நாள் எங்கள் இருவருக்கும் மிகச் சிறப்பு வாய்ந்தது. எங்கள் இரு வீட்டாரும் முன்னிலையில் நிச்சயதார்த்தம் செய்து கொண்டுள்ளோம். எங்களின் புதிய பயணத்தில் உங்கள் அன்பு மற்றும் ஆசீர்வாதங்கள் தேவை" என்று பதிவிட்டுள்ளனர்.

தமிழில் ’மிருகம்’, ’ஈரம்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள நடிகர் ஆதி, ’யாகவாயினும்’, ’நா காக்க’, ’மரகத நாணயம்’ உள்ளிட்ட படங்களில் நிக்கி கல்ராணியுடன் சேர்ந்து நடித்தார். அதிலிருந்தே காதலர்களாக பல இடங்களில் வலம் வந்தவர்கள், விரைவில் தம்பதிகளாக மாறவுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x