Published : 22 Mar 2022 12:34 PM
Last Updated : 22 Mar 2022 12:34 PM
சென்னை: தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் வெற்றி பெற்ற புதிய நிர்வாகிகள் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று , தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை, தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் வெற்றி பெற்ற புதிய நிர்வாகிகளான தலைவர் நாசர், பொதுச் செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, துணைத் தலைவர் பூச்சி எஸ்.முருகன் ஆகியோர் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.
இவர்களுடன் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்கள் சரவணன், மனோபாலா, தளபதி தினேஷ், காளிமுத்து, வாசுதேவன், அஜய்ரத்தினம், ஜெரால்டு, லலிதாகுமாரி, ஹேமச்சந்திரன், சோனியா, கோவை சரளா, லதா, ஸ்ரீமன், சவுந்தர், வழக்கறிஞர் கிருஷ்ணன், பொது மேலாளர் பாலமுருகன் ஆகியோரும் முதல்வரை சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.
இந்த நிகழ்வின்போது, சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் உடனிருந்தார்.
முன்னதாக, கடந்த 2019ம் ஆண்டு ஜூன் 23-ம் தேதி தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் திரை பிரபலங்கள் தங்கள் வாக்குகளைச் செலுத்தினர். இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சவுத் இந்தியன் வங்கி கிளை பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்டன. இதனிடையே தேர்தலை ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட வாக்கு எண்ணிக்கை தாமதமானது.
இதனிடையே, கடந்த மாதம் இந்த தேர்தல் செல்லும் என்றும் வாக்கு எண்ணிக்கை நடத்தலாம் என்றும் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதன்படி, கடந்த மார்ச் 20-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் நாசர் - விஷால் தலைமையிலான பாண்டவர் அணி வெற்றிபெற்றது. பொதுச்செயலளார் பதவிக்கு போட்டியிட்ட விஷால் மீண்டும் வெற்றிபெற்றார். இதேபோல் பொருளாளர் பதவியில் போட்டியிட்ட நடிகர் கார்த்தியும் வெற்றிபெற்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT