Published : 14 Mar 2022 04:06 PM
Last Updated : 14 Mar 2022 04:06 PM

நடிகர் விஜய் தொடர்ந்த வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்க: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு

சென்னை: வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட காருக்கு வரி செலுத்த தாமதமானதால், விதிக்கப்பட்ட அபராதத்தை ரத்து செய்யக் கோரி நடிகர் விஜய் தாக்கல் செய்த மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என வணிக வரித்துறை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நடிகர் விஜய் கடந்த 2005-ம் ஆண்டு அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்த 63 லட்ச ரூபாய் மதிப்புள்ள பிஎம்டபிள்யூ எக்ஸ்-5 காருக்கு நுழைவு வரி செலுத்த தமிழக அரசு வணிக வரித்துறை உத்தரவிட்டது. இதை எதிர்த்து விஜய் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

நுழைவு வரி வசூலிக்க மாநிலங்களுக்கு அதிகாரம் உள்ளது என உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த பின், விஜய் தரப்பில் 7 லட்சத்து 98 ஆயிரத்து 75 ரூபாய் நுழைவு வரி செலுத்தப்பட்டது. இந்நிலையில், வரி செலுத்தப்படாத இடைப்பட்ட காலத்திற்கான அபராதமாக 30 லட்சத்து 23 ஆயிரத்து 609 ரூபாய் செலுத்த வேண்டுமென 2021-ம் ஆண்டு டிசம்பர் 17-ல் வணிக வரித்துறை உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து விஜய் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். மேலும், இதே கோரிக்கைகளுடன் அடையார் கேட் ஹோட்டல் நிர்வாகம் மற்றும் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் ஆகியோரும் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்குகள் நீதிபதி சுரேஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஹாரிஸ் ஜெயராஜ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 2008-ம் ஆண்டு கார் இறக்குமதி செய்யப்பட்ட நிலையில் வரி செலுத்தக்கோரி 2021-ம் ஆண்டு தான் நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. எனவே அந்த நோட்டீசை ரத்து செய்ய வேண்டுமென வாதிட்டார்.

தொடர்ந்து வாதங்களை முன்வைத்த நடிகர் விஜய் தரப்பு வழக்கறிஞர், கார் இறக்குமதி செய்யப்பட்டதில் இருந்து மாதத்திற்கு 2 சதவீதம் என கணக்கிட்டு மட்டுமே அபராதம் விதிக்கப்பட வேண்டும். ஆனால் மனுதாரர் விஜய்க்கு, 400 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இதனிடையே நடிகர் விஜய் தாக்கல் செய்த மனுவிற்கு வணிக வரித்துறை சார்பில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில்,இந்த வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும். நுழைவு வரியை செலுத்த வேண்டும் என உயர் நீதிமன்றம் 2019-ல் உத்தரவு பிறப்பித்தது. ஆனால் மனுதாரர் குறித்த காலத்தில் நுழைவு வரி செலுத்தவில்லை. எனவே 2005 டிசம்பர் முதல், 2021 செப்டம்பர் வரையிலான 189 மாதங்களுக்கு நுழைவு வரியில் 2 சதவீதம் அபராத வட்டியாக 30 லட்சத்து 23 ஆயிரத்து 609 ரூபாய் செலுத்தும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கு சட்டத்தில் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

காரை வேறொரு நபருக்கு விற்று விட்டதாக மனுதாரர் கூறினாலும், இறக்குமதி செய்த அவர் நுழைவு வரி செலுத்தியாக வேண்டும். ஆவணங்களை தாக்கல் செய்ய நோட்டீஸ் கொடுத்து, போதிய அவகாசம் வழங்கிய போதும், எந்த பதிலும் இல்லாததால் வட்டார போக்குவரத்து அலுவலக ஆவணங்களைப் பெற்று நுழைவு வரியை கணக்கிட்டதாகவும் பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி, 3 வழக்குகளையும் தேதி குறிப்பிடாமல் தீர்ப்புக்காக ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x