சதுரங்க வேட்டை 2 படத்தின் கதையை திருடி தெலுங்கு திரைப்படம்?- பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

சதுரங்க வேட்டை 2 படத்தின் கதையை திருடி தெலுங்கு திரைப்படம்?- பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

Published on

சென்னை: சதுரங்க வேட்டை 2 படத்தின் கதையைத் திருடி, தெலுங்கில் "கிலாடி" படம் தயாரிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, அந்தப் படத்தை ஓடிடி தளத்தில் வெளியிடுவதற்கான விற்பனை நடைமுறைகளுக்கு தடை கோரிய வழக்கில் கிரண் ஸ்டூடியோ நிறுவனம் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில், திரைப்பட தயாரிப்பாளர் கங்காதரன் தாக்கல் செய்துள்ள மனுவில், சதுரங்க வேட்டை 2 திரைப்படத்தை தமிழில் வெளியிட காப்புரிமை பெற்றுள்ளேன். அந்த படத்தை தெலுங்கில் டப்பிங் செய்து வெளியிடும் உரிமையை ஹைதராபாத்தில் உள்ள கிரண் ஸ்டூடியோ நிறுவனத்தை சேர்ந்த ரமேஷ் வர்மாவுடன் 40 லட்ச ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்திருந்தேன்.

இந்நிலையில், சதுரங்க வேட்டை 2 கதையை மையமாக வைத்து , ரவி தேஜா நடிப்பில் "கிலாடி" என்ற படத்தை, ஒப்பந்தத்துக்கு விரோதமாக தெலுங்கில் வெளியிடப்பட்டுள்ளது.

எனவே, கதை திடுட்டில் ஈடுபட்ட கிரண் ஸ்டூடியோ நிறுவனம் "கிலாடி" திரைப்படத்தை ஓடிடி மற்றும் பிற தளங்களில் வெளியிடுவதற்கும், விற்பனை செய்வதற்கான நடைமுறைகளை மேற்கொள்வதற்கும் தடை விதிக்க வேண்டும் எனக் கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி நிர்மல்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த மனு குறித்து கிரண் ஸ்டுடியோ நிறுவனம் ஒரு வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை தள்ளிவைத்தார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in