Published : 17 Feb 2022 02:32 PM
Last Updated : 17 Feb 2022 02:32 PM

கட்சிகளுக்கும், மக்களுக்கும் பாடம் சொல்லும் படம் ‘கோடியில் ஒருவன்’ - ராமதாஸ் பாராட்டு

“ஓர் அரசியல்வாதி எவ்வாறு இருக்க வேண்டும். எவ்வாறு இருக்கக்கூடாது, ஓர் அரசியல்கட்சி எவ்வாறு இருக்க வேண்டும். எவ்வாறு இருக்கக்கூடாது, மக்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும். யாருக்கு வாக்களிக்கக் கூடாது என்பதை விளக்கும் திரைப்படம் தான் ‘கோடியில் ஒருவன்’” என்று ராமதாஸ் பாராட்டு தெரிவித்துள்ளார்.

ஆனந்த கிருஷ்ணன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்த படம் ‘கோடியில் ஒருவன்’.இப்படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக ஆத்மிகா நடித்திருந்தார். நிவாஸ் கே.பிரசன்னா இசையமைக்க, இன்ஃபினிட்டி பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்திருந்தது. இப்படம் கடந்த செப்டம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. சமீபத்தில் அமேசன் ப்ரைம் தளத்திலும் இப்படம் வெளியானது.

இந்நிலையில் ‘கோடியில் ஒருவன்’ படத்தை பார்த்த பாமக நிறுவனர் ராமதாஸ் அப்படத்தை பாராட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:

கொரோனா வைரஸ் பரவல் காலம் என்னை வீட்டுக்குள் முடக்கிப் போட்டிருப்பது குறித்தும், அதனால் பாட்டாளிகளை சந்திக்க முடியாமல் வாடிக் கொண்டிருப்பது குறித்தும் பலமுறை எழுதியிருக்கிறேன். சங்க இலக்கியங்களை படித்தல், நூல்களை எழுதுதல், பிறந்தநாள் கொண்டாடும் பாட்டாளி சொந்தங்களுடன் வாழ்த்து சொல்ல உரையாடி, மரக்கன்றுகள் நடச் செய்தல் இப்படியாகத் தான் எனது நாட்கள் கழிகின்றன.

இடையிடையே சமூகத்திற்கு நல்ல கருத்துகளைக் கூறும் திரைப்படங்களையும் பார்த்தேன். பணிகள் காரணமாக, திரைப்படங்களைத் தொடர்ச்சியாகப் பார்க்க முடியாது. ஒரு படம் பார்த்து முடிக்க 2 அல்லது 3 நாட்களாகி விடும். அந்த வரிசையில் கடந்த 3 நாட்களாக நான் பார்த்த திரைப்படம் ‘கோடியில் ஒருவன்’.

ஓர் அரசியல்வாதி எவ்வாறு இருக்க வேண்டும். எவ்வாறு இருக்கக்கூடாது! ஓர் அரசியல்கட்சி எவ்வாறு இருக்க வேண்டும். எவ்வாறு இருக்கக்கூடாது! மக்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும். யாருக்கு வாக்களிக்கக் கூடாது! என்பதை விளக்கும் திரைப்படம் தான் ‘கோடியில் ஒருவன்’. இந்தத் திரைப்படம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.
இதனிடையே எனக்கும் பாட்டாளிகளுக்கும் நல்ல செய்தி கிடைத்திருக்கிறது.

தமிழ்நாட்டில் தினசரி கொரோனா வைரஸ் சுமார் 1000 என்ற அளவுக்கு குறைந்து விட்டது. இனி எப்போதோ ஒருமுறை திரைப்படம் பார்ப்பதற்கும் விடை கொடுத்து விட்டு, பாட்டாளிகளை சந்திக்க அதிக வாய்ப்பு கிடைக்கும். உள்ளாட்சித் தேர்தல் நடைமுறைகள், பாட்டாளி மக்கள் கட்சியின் நிழல் நிதிநிலை அறிக்கைகள் வெளியீடு ஆகிய பணிகள் முடிவடைந்த பிறகு மாவட்டம் தோறும் சென்று மக்களை சந்திக்கவுள்ளேன். இது குறித்த அறிவிப்பை விரைவில் வெளியிடுவேன்.

இவ்வாறு அப்பதிவில் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x