Last Updated : 14 Feb, 2022 08:58 PM

 

Published : 14 Feb 2022 08:58 PM
Last Updated : 14 Feb 2022 08:58 PM

"இருவரும் இயல்பு மாறாமல் அவரவராகவே வாழ்கிறோம்!" - 'ரஜினி' தொடரின் நாயகி ஸ்ரேயா 'காதலர் தின' பேட்டி

"காதலுக்குப் பின் திருமண வாழ்விலும் இருவரும் இயல்பு மாறாமல் அவரவராகவே இருக்கிறோம். காதல் கணவர் சித்துவிடம் அவரது சமையல்தான் ஸ்பெஷல்..." என்றெல்லாம் பர்சனல் வாழ்க்கையைப் பகிர்கிறார் `ரஜினி` தொடரின் நாயகி ஸ்ரேயா. காதலர் தினத்தையொட்டி அவருடனான உரையாடல்...

உங்கள் திரைப் பயணம் எப்படித் தொடங்கியது? - ``என் பூர்விகம், மங்களூரு. நான் ஒரு டான்ஸர். பி.காம்., ஃபைனல் இயர் படித்துக் கொண்டிருந்தபோது, ஆக்டிங் வாய்ப்புகள் வந்தன. அதற்குமுன், எனக்கு நடிக்கும் எண்ணம் இல்லை. கன்னடத்தின் 'அரமனே' சீரியல் கேரக்டரை கேட்ட உடனே பிடித்துப்போனதால், அதில் ஹீரோயினா நடித்தேன். ஒருகட்டத்தில் ஆக்டிங் ரொம்பவே பிடித்துப்போனது. அடுத்து, 'ஒந்து மொட்டெயா கதே' என்ற கன்னட படத்தில் நடித்தேன். துளு மொழி படத்திலும் ஹீரோயினாக நடித்துள்ளேன்."

உங்களின் காதல் கதை...

"நான் `திருமணம்` சீரியல் பண்ணும்போதுதான் சித்து எனக்கு பழக்கம். அப்போது நான் சென்னைக்குப் புதுசு. நிறைய எனக்கு லாங்வேஜ் பிராப்ளம் இருந்தது . அப்போது சித்து எனக்கு நிறைய உதவி செய்தார். இப்படித்தான் ஆரம்பித்தது எங்களின் நட்பு. நாங்கள் எப்போதும் டாம் அன்ட் ஜெர்ரி போல சண்டைப் போட்டுக்கொண்டே இருப்போம். ஆனால், யோசித்துப் பார்த்தால் எந்தப் புள்ளியில எங்களுக்குள் இருந்த, இந்த நட்பு காதலாக மாறியது என்று இப்போது வரைக்கும் தெரியவில்லை. அதற்கு பிறகு வீட்டில் பேசித்தான் எங்கள் திருமணத்தை முடிவு செய்தோம்.

பொதுவாகவே, எங்கள் வீட்டில் நான் சொல்லிகிட்டே இருப்பேன். என் மனதுக்கு பிடித்த மாதிரி ஒரு பையன் கிடைத்தால்தான் திருமணம் செய்துகொள்வேன். இல்லையென்றால் திருமணம் பண்ணமாட்டேன், இப்படியே இருந்துகொள்வேன் என்று கூறியிருந்தேன். ஆனால், என் மனது போலவே நினைத்தபடி எல்லாம் அமைந்தது. எனக்கு சித்துவிடம் நிறைய விஷயங்கள் பிடித்திருந்தன. அதனால்தான் என்னவோ, இப்போது வரைக்கும் சித்து போன்ற ஒருவரை மிஸ் பண்ணக் கூடாது என்று ஒவ்வொரு நிமடமும் எனக்கு தோன்ற வைத்து கொண்டிருக்கிறார்.”

திருமணத்திற்குப் பிறகு...

”பொதுவாகவே திருமணம் முடிந்தால் அவ்வளவுதான். பெண்களின் சுதந்திரம் எல்லாம் பறிபோய்விடும். இப்படி பலரும் கிண்டல் செய்து பயமுறுத்துவதைப் பார்த்திருக்கிறேன். ஆனால் என் வாழ்க்கையில ரொம்ப சந்தோஷம்னா, அது திருமண வாழ்க்கைதான். இது தெரிந்திருந்தால் நாங்கள் இன்னும் முன்னதாகவே திருமணம் செய்து கொண்டிருப்போம். இப்போதுவரை நாங்கள் இருவரும் இயல்பு மாறாமல் அவரவராகவே இருந்து வருகிறோம். அதைத்தான் எங்களது காதலின் சிறப்பாக திருமணத்திற்குப் பின்னர் பார்க்கிறேன்.”

சித்து பற்றி...

சித்து பற்றி சொல்ல வேண்டுமென்றால், சொல்லிக் கொண்டே இருக்கலாம். அவர் என் வாழ்வில் கிடைத்த மிகச்சிறந்த பரிசு. ஒரு பெண் தனக்கான கணவர் எப்படியெல்லாம் வரவேண்டும் என்று எதிர்ப்பார்த்திருப்பார்களோ, அத்தனை குணங்களும் அவரிடம் உண்டு. அதனால நான் ரொம்ப அதிர்ஷ்டகாரி.

முக்கியமானது, சித்து ரொம்ப சூப்பராக சமைப்பார். அவர் வைக்கும் சிக்கன் குழம்பு, மட்டன் கிரேவிக்காகவே நாள் முழுவதும் அவரை லவ் பண்ணலாம். அவ்வளவு அருமையாக சமைப்பார்.

எங்கள் வீட்டில் எங்களின் காதலுக்காக வந்து பேசும்போது, துளு மொழி கற்றுக்கொண்டு வந்துதான் பெண் கேட்பேன் என்று சொல்லி, அதனை கற்றுக்கொண்டு வந்துதான் பெண் கேட்டார். அந்த அளவுக்கு ஒரு விஷயத்தில் எப்போதும் தனித்துவமான ஈடுபாடு கொண்டவர்."

இருவருமே பேருமே நடிகர்கள்... டைம் மேனேஜ்மென்ட் எப்படி?

"ரொம்ப கஷ்டம்ங்க. நான் வீட்டிற்கு வரும் சில நேரம் அவர் ஷூட்டிங்கிற்கு கிளம்பிக் கொண்டிருப்பார். அவர் வருகிற சமயத்தில், நான் கிளம்ப வேண்டியதாகிவிடும். இருந்தபோதிலும் எங்களுக்கான நேரத்தை நாங்கள் ஏதாவது ஒரு தருணத்தில் எடுத்துக் கொள்கிறோம். முக்கியமாக புரிந்து கொள்கிறோம்."

புரிதல் எப்படி?

"முதலில் எனக்குத்தான் கோபம் வரும், அவருக்கும் கோபம் வரும், ஆனாலும் கட்டுப்படுத்திக் கொள்வார். ஆனால் எனக்கு அவரிடம் உரிமை அதிகம் இருப்பதால் அவர் எனக்கு அந்த இடத்தைக் கொடுத்திருக்கிறார். மன்னிப்பு கேட்பதென்றால்கூட, எப்போதும் அவர்தான் ஃபர்ஸ்ட். ஏனென்றால், அவருக்கு நான் உம்முன்னு இருக்கிற சில நிமிடங்கள் கூட பிடிக்காது. அதனால் தலைவர் மன்னிப்புக் கேட்டுவிடுவார். நானும் கொஞ்சம் பிகு பண்றாப்ல நடிச்சிட்டு, பிறகு நானும் மன்னிப்புக் கேட்டுவிடுவேன். இது எல்லாமே ஒரு சந்தோஷம்தான். மற்றபடி அரை மணி நேரத்திற்கு கூட எங்கள் கோபம் இருந்ததில்லை. அந்த அளவுக்குப் புரிதல் இருக்கு."

சித்துவுக்கும் உங்களுக்குமான காதலர் தின அனுபவம்...

"ப்ரபோஸ் பண்ணிட்டு இருந்த சமயத்தில் வந்த காதலர் தினத்தில் மட்டும் சித்து, எனக்காகவே ஸ்பெஷலா ஒரு பார்ட்டி தயார் செய்து, மோதிரம் எல்லாம் கொடுத்து சர்ப்ரைஸ் செய்து கலக்கினார். ஆனால், காதலை ஒத்துக்கொண்ட பின்னர் வந்த அடுத்த காதலர் தினத்தை அவர் மறந்தே போனரென்று, நினைத்துவிட்டேன். அப்படித்தான் கடைசி நிமிடம் வரை நினைத்துக்கொண்டே இருந்தேன். ஆனால் கடைசி நிமிடத்தில் வந்து சர்ப்ரைஸ் கிப்ட் கொடுத்தார். அது சந்தோஷமாக இருந்தது. பொதுவாகவே காதலர்களுக்கு எல்லா நாட்களும் ஸ்பெஷல் தானே.

காதலில் ஒருத்தருக்கு ஒருத்தர், எவ்வளவுக்கு எவ்வளவு செல்லச் சண்டைகள் போடுகிறோமோ, அந்தளவுக்கு விட்டுக் கொடுத்து செல்லுங்கள். உங்கள் காதலர் மீதான உங்களின் புரிதல் தான் திமு | திபி காதலுக்கான நீண்ட ஆயுள் ரகசியம். முக்கியமாக எதையும் ஒருவருக்கொருவர் மறைக்காதீர்கள். திறந்த மனதுடன் இருங்கள்.

டைரக்டர் சுந்தர் சி உடன் இணைந்து பணியாற்றிய அனுபவம்?

`` நான் நடித்த ஒரு கன்னட சீரியலைப் பார்த்துதான் `நந்தினி` சீரியலில் காயத்ரி கேரக்டருக்கு என்னை தேர்வு செய்தார்கள். எனக்கு ஆடிஷன் எதுவும் வைக்கவில்லை. ஆரம்பத்தில் தமிழில் நடிக்க உதறலாக இருந்தது. ஏனென்றால், 'வணக்கம்; நன்றி' என்ற வார்த்தைகளைத் தவிர சுத்தமாக எனக்கு தமிழ்த் தெரியாது. 'அதெல்லாம்கூட ஒரு பிரச்சினை இல்லை. கற்றுக் கொடுக்கிறோம்'னு டைரக்டர் சொல்லவும் தான் நான் தைரியமாக ஏற்று கொண்டேன். அதன்மூலம் ஓரளவுக்கு நான் தமிழ் கற்றுக்கொண்டேன். குஷ்பு மேடம் என்கிட்ட நன்றாக பேசுவார்கள். சுந்தர் சி சாருடன் அந்த காலகட்டங்களில் சேர்ந்து பணியாற்றும் வாய்ப்பும் குறைவாகத்தான் இருந்தது."

`ரஜினி` சீரியல் வாய்ப்பு எப்படி வந்தது?

"`ரஜினி` சீரியல் பற்றி சொல்வதற்கு நிறைய இருக்கிறது. ஒரு போல்டான பெண் கேரக்டர். நாம் இப்போது வரைக்கும் ஒவ்வொரு வீடுகளிலும் பார்க்கலாம். வீட்டிற்காகவே கடுமையாக கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் பல பெண்கள் இன்றும் ஏராளமாக இருக்கிறார்கள். அப்படிப்பட்ட பெண்களில் ஒருத்தி தான் `ரஜினி` சீரியல் நாயகி. கதை கேட்டவுடனே எனக்கு மிகவும் பிடித்து விட்டது. இந்த `ஜீ தமிழ்` மூலம் இப்போது எனக்கு ஒரு அருமையான டீம் கிடைத்திருக்கிறது. இதன்மூலம் இப்போது நான் எல்லோரது இல்லங்களிலும் வலம் வந்து கொண்டிருக்கிறேன்."

ஷூட்டிங் ஸ்பாட் எப்படி?

``ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்துவிட்டாலே அனைவரும் ஒரு குடும்பம் போல் மிகவும் மகிழ்ச்சியாக மாறிவிடுவார்கள். அந்த உணர்வே நம்மை நாள் முழுவதும் கலகலப்பாக வைத்துவிடும். ஆர்ட்டிஸ்ட்கள் நாங்கள் ஒருவருக்கொருவர் பேசி கேலி கிண்டல்னு நிறைய கலாய்த்துக் கொண்டுதான் இருப்போம். மதிய உணவு வேளையின் போதெல்லாம் எங்கள் பக்கம் நெருங்க முடியாது. சும்மா தெறிக்க விடுவோம்ல."

உங்களின் ஒரிஜினல் கேரக்டர் என்ன?

"அமைதி + தைரியம் இரண்டுக்கும் நடுவிலான கலவை நான்."

உங்களை ஈர்த்தவர்கள்...

"எனக்கு நயன்தாரா மேடம் ரொம்ப பிடிக்கும். நயன்தாரா மேடம் நடிப்புலகில் எங்களுக்கெல்லாம் ஒரு பெரிய பூஸ்ட். அடுத்ததாக சிவகார்த்திகேயன் சாரை ரொம்ப பிடிக்கும்."

இந்த வருட காதலர் தினத்துக்கு என்ன ஸ்பெஷல்?

"அது எப்போதும் கடைசி நிமிட ரகசியம்தாங்க."

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x