Published : 08 Feb 2022 08:41 PM
Last Updated : 08 Feb 2022 08:41 PM

பிக்பாஸ் மூலம் யாரும் ஸ்டார் ஆக முடியாது; ஆனால்... - ரேகா ஓபன் டாக்

பிக்பாஸ் மூலம் யாரும் ஸ்டார் ஆக முடியாது என்று நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது ரேகா குறிப்பிட்டுள்ளார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி ‘பிக் பாஸ்’. 5 சீசன்கள் முடிந்துள்ள இந்த நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கியுள்ளார். தற்போது ‘பிக் பாஸ் அல்டிமேட்’ என்ற பெயரில் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் புதிதாக ஒளிபரப்பாகி வருகிறது. இதையும் கமல்ஹாசனே தொகுத்து வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

இதில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசன் போட்டியாளர்களில் ஒருவராகக் கலந்து கொண்டார் ரேகா. சில நாட்களிலேயே நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டு, பின்பு பேட்டிகள் அளித்து வந்தார். தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடப்பது எல்லாம் உண்மையா, பொய்யா என்பதை நிகழ்ச்சியில் ஒன்றில் கலந்து கொண்டு வெளிப்படையாகப் பேசியுள்ளார் ரேகா.

இயக்குநரும் பாடலாசிரியருமான எம்.ஜி. வல்லபனின் பேத்தி ஆதிரா பிரகாஷின் நடன அரங்கேற்றம் வாணி மஹாலில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக ரேகா கலந்து கொண்டு பேசினார். முதலில் ஆதிராவை வாழ்த்திப் பேசிவிட்டு, பின்பு பிக் பாஸ் தொடர்பாக ரேகா பேசியது:

“என் மகள் நியூயார்க்கில் படித்து முடித்து விட்டு இப்போது வேலையில் சேர்ந்திருக்கிறாள். அங்கே மகளைத் தனியே விட்டுவிட்டு சுமார் ஒன்றரை ஆண்டுகளாக விசா கிடைக்காமல் நாங்கள் கணவன் மனைவி மட்டும் இங்கே தனியே இருக்கும்போது வருத்தமாக இருந்தது.

பதினைந்து நாள் பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் போய்விட்டு வரலாம் என்று நினைத்தேன் . பிக்பாஸில் நடப்பது உண்மையா பொய்யா என்று தெரிந்து கொள்ளலாம் என்று ஒரு பதினைந்து நாள் போய்விட்டு வந்தேன். அது முடிந்தவுடன் குக் வித் கோமாளி போய்விட்டு வந்தேன்.

பிக்பாஸில் அந்த நூறு நாட்களும் சூழல்களைத் தூண்டிவிட்டு ஒரு பரபரப்பை உருவாக்குவார்கள். உதாரணமாக சனமாக இருக்கட்டும், வேறு யாராகவும் இருக்கட்டும், நான் தான் சமைக்கிறேன் என்று சொன்னேனே என்று சண்டை போடுவது வரை பாருங்கள், அதுதான் மக்களுக்குப் பிடிக்கிறது. எனவேதான் சண்டைபோடும் சூழ்நிலைகளை உண்டாக்குகிறார்கள். அடிக்கடி சண்டைகள் நடக்கும், வெள்ளிக்கிழமை மீண்டும் சேர்ந்து கொள்வார்கள். சனி, ஞாயிறு மாறிவிடுவார்கள்.

பிக்பாஸ் மூலம் நூறு நாட்கள் தான் பிரபலமாக இருக்கமுடியும். பிக்பாஸ் மூலம் யாரும் ஸ்டார் ஆக முடியாது. ஆனால் வாழ்க்கையில் நிறைய கற்றுக் கொள்ளலாம். அங்கே போன் கிடையாது, பேப்பர் கிடையாது, யாரும் சொல்லிக் கொடுப்பதில்லை. அந்த நிலையில் யாரும் பொறுமையாக இருந்து காண்பிக்க வேண்டும். நான் 15 நாட்களும் பொறுமையாக இருந்தேன். என் மீது நிறையப் பேருக்குப் பொறாமை இருந்தது. எல்லாம் சாதித்துவிட்டு வந்திருக்கிறார் என்று” - இவ்வாறு ரேகா பேசியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x