Published : 06 Feb 2022 09:51 AM
Last Updated : 06 Feb 2022 09:51 AM

பழம்பெரும் பாடகர் லதா மங்கேஷ்கர் மறைவு: அரை நூற்றாண்டாக தேனிசைக் குரலால் ரசிகர்களை மகிழ்வித்தவர்

கரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பழம்பெரும் பாடகர் லதா மங்கேஷ்கர் காலமானார். அவருக்கு வயது 92.

கரோனா தொற்று தொடர்பான லேசான அறிகுறிகளுடன், தெற்கு மும்பையின் ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் ஜன.8-ல் லதா மங்கேஷ்கர் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவரது உடல்நிலை சற்று கவலைக்கிடமாக இருந்ததால் உடனடியாக ஐசியூ வார்டில் வைத்து பராமரிக்கப்பட்டார்.

தொடர்ந்து அவருக்கு வெண்டிலேட்டர் வசதி பொருத்தப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனால், உலகம் முழுவதுமுள்ள லதா மங்கேஷ்கரின் ரசிகர்கள், அவர் உடல்நலம் பெற பிரார்த்தனை மேற்கொள்ளத் தொடங்கினர்.

தொடர்ந்து 20 நாள்கள் சிகிச்சைக்குப் பிறகு அவரின் உடல்நலம் தேறியது. இதனால் கடந்த வாரம் வெண்டிலேட்டர் சிகிச்சை நிறுத்தப்பட்டது.

ஆனால், நேற்று அவரின் உடல்நிலை மீண்டும் கவலைக்கிடமாக உள்ளது என ப்ரீச் கேண்டி மருத்துவமனை நிர்வாகம் தகவல் வெளியிட்டது.

இந்நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி லதா மங்கேஷ்கர் காலமானார். அவரது மறைவை லதாவின் சகோதரி உஷா மங்கேஷ்கர் உறுதி செய்தார். பலரும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்திய சினிமாவின் சிறந்த பின்னணிப் பாடகர்களில் ஒருவராகத் திகழும் லதா மங்கேஷ்கர், 1942-ல் தனது 13-வது வயதில் இசை வாழ்க்கையைத் தொடங்கியவர். இந்தியாவின் பல்வேறு மொழிகளில் 30,000 பாடல்களுக்கு மேல் பாடியுமிருக்கிறார். கிட்டத்தட்ட ஏழு தசாப்த கால இசை வாழ்க்கையில், பல்வேறு மறக்கமுடியாத கானங்களுக்கு தனது குரலால் உயிர்கொடுத்தவர் என்பதால், இந்தியாவின் 'மெலடி குயின்' என்று ரசிகர்களால் போற்றப்படுகிறார். பத்ம பூஷன், பத்ம விபூஷண் மற்றும் தாதா சாஹேப் பால்கே விருது மற்றும் பல கவுரவங்களை லதா மங்கேஷ்கர் பெற்றுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x