Published : 31 Jan 2022 05:31 PM
Last Updated : 31 Jan 2022 05:31 PM

மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் பாரதிராஜா 

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த இயக்குநர் பாரதிராஜா தற்போது வீடு திரும்பியுள்ளார்.

இந்தியாவில் தற்போது கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. கரோனா வைரஸின் உருமாற்ற டெல்டா வைரஸ் பரவுவதோடு, தற்போது ஒமைக்ரான் வைரஸ் பரவலும் அதிகரித்துள்ளது. திரையுலக பிரபலங்கள் மகேஷ் பாபு, அருண் விஜய், விஷ்ணு விஷால், சத்யராஜ், த்ரிஷா, குஷ்பு, மீனா, இசையமைப்பாளர் தமன் உள்ளிட்ட பலருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் பலரும் தற்போது தொற்றிலிருந்து குணமடைந்து விட்டனர்.

இயக்குநர் பார்திராஜா கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கடந்த ஒரு வாரகாலமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், கரோனாவிலுருந்து முழுமையாக குணமைடைந்து வீடு திரும்பியுள்ளார் பாரதிராஜா. இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கரோனா தொற்று ஏற்பட்டு ஒரு வார காலமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தேன். என் நண்பர் டாக்டர் நடேசனின் நேரிடை கண்காணிப்பில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு நலமுடன் இன்று இல்லம் திரும்பிவிட்டேன்.

நடேசனுக்கும் மருத்துவமனையில் சிகிச்சைக்கு உறுதுணையாக இருந்த ஏனைய மருத்துவர்கள், செவிலியர் மற்றும் தமிழ்நாடு அரசு மருத்துவர்கள், மாநகராட்சி ஊழியர்கள், என் உடல் நிலை குறித்து தொடர்ந்து தொலைபேசி, சமூக ஊடகங்கள் வாயிலாக நலம் விசாரித்த நண்பர்கள், இயக்குநர்கள் , திரைத்துறை நண்பர்கள், உறவுகள், அரசியல் பெருமக்கள், ஊடக நண்பர்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.

பொதுமக்கள் தொடர்ந்து முகக்கவசங்களை அணிந்து, பொதுவெளியில் தனிமனித இடைவெளியைக் கடைபிடிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்" என்று பாரதிராஜா கூறியுள்ளா.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x