Last Updated : 02 Apr, 2016 11:28 AM

 

Published : 02 Apr 2016 11:28 AM
Last Updated : 02 Apr 2016 11:28 AM

தெறி அப்டேட்ஸ்: கோடிகளைக் கொட்டும் விநியோகஸ்தர்கள்!

விஜய் நடித்திருக்கும் 'தெறி' படத்தின் விநியோக உரிமையைக் கைப்பற்ற பெரும் தொகையை கொடுத்திருக்கிறார்கள் விநியோகஸ்தர்கள்.

அட்லீ இயக்கத்தில் விஜய், சமந்தா, ஏமி ஜாக்சன், இயக்குநர் மகேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் 'தெறி' படத்தின் இறுதிகட்டப் பணிகள் முடிந்து, தணிக்கைக்கு விண்ணப்பித்திருக்கிறார்கள். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருக்கும் இப்படத்துக்கு ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். தாணு தயாரிக்கிறார்.

இப்படத்தின் டீஸர், ட்ரெய்லர், பாடல்கள் ஆகியவற்றுக்கு இணையத்தில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. ஏப்ரல் 14ம் தேதி இப்படத்தை வெளியிடும் முனைப்பில் வியாபாரத்தையும் தொடங்கி இருக்கிறார்கள்.

இதுவரை இல்லாத அளவுக்கு, விஜய் படத்தை பெரும் விலை கொடுத்து விநியோகஸ்தர்கள் வாங்கியிருக்கிறார்கள். கேரள உரிமையை 5.6 கோடிக்கு வாங்கியிருக்கிறார்கள். இந்த விலை அங்குள்ள முன்னணி நடிகர்கள் படத்தை விட அதிகம் என்கிறார்கள். மேலும், அமெரிக்க உரிமையை 3 கோடிக்கு கொடுத்திருக்கிறார்கள்.

தஞ்சாவூர், திருச்சி, மதுரை உள்ளிட்ட ஏரியாக்களின் விநியோக உரிமையும் பெரும் விலைக்குப் போயிருக்கிறது. இதனால் படம் கண்டிப்பாக சூப்பர் ஹிட்டாக அமைந்தால் மட்டுமே போட்டிருக்கும் பணத்தை எடுத்து லாபம் பார்க்க முடியும் என்கிறார்கள். இந்த விலை கொடுத்து வாங்குவது படத்தின் மீது இருக்கும் நம்பிக்கையால் தான் என்றும், மேலும் டீஸர் மற்றும் ட்ரெய்லருக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதும் ஒரு காரணம் என்கிறார்கள்.

எப்போது சென்சார் பணிகள் முடிவடையும் என்று சில ஏரியாக்களின் வியாபாரத்தைப் பேச விநியோகஸ்தர்கள் காத்திருக்கிறார்கள். இப்படத்தின் சென்சார் பணிகள் இன்னும் ஓரிரு நாட்களில் முடிவடையும் எனத் தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x