Published : 20 Jan 2022 01:42 PM
Last Updated : 20 Jan 2022 01:42 PM

30 நாடுகளில் ட்ரெண்டிங்; இது ஒரிஜினல் சூப்பர் ஹீரோ படம் - ‘மின்னல் முரளி’ வெற்றி குறித்து டொவினோ தாமஸ் பெருமிதம்

‘மின்னல் முரளி’ வெற்றி குறித்து டொவினோ தாமஸ் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

பேசில் ஜோசப் இயக்கத்தில் டொவினோ தாமஸ், குரு சோமசுந்தரம் நடித்த படம் ‘மின்னல் முரளி’. சூப்பர் ஹீரோ கதைக்களத்தைக் கொண்ட இப்படம் சமீபத்தில் நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்திய பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் இப்படத்தைப் பார்த்துவிட்டுப் பாராட்டு தெரிவித்தனர்.

இந்நிலையில் மின்னல் முரளி வெற்றி குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் டொவினோ தாமஸ் தனது மகிழ்ச்சியைப் பதிவு செய்துள்ளார்.

அப்பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது:

''வாழ்க்கை பெரிதாக மாறிவிடவில்லை. ஆனால், எங்களுக்குக் கிடைத்துவரும் பாராட்டுகளை நாங்கள் ரசித்து அனுபவித்து வருகிறோம். இப்படத்தை உருவாக்கும்போது நாங்கள் கண்ட கனவுகள், எங்களின் கடின உழைப்பு ஆகியவற்றுக்கான பலன் கிடைத்ததில் மகிழ்ச்சி. இப்படத்தைப் பார்த்த மக்களுக்கு படம் மிகவும் பிடித்துப் போகிறது.

உலகம் முழுவதும் 30 நாடுகளில் ‘மின்னல் முரளி’ ட்ரெண்டிங்கில் இருப்பதைப் பார்க்கும்போது பெருமையாக உள்ளது. காரணம் இதைத்தான் நாங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தோம். நெட்ஃப்ளிக்ஸால் மட்டுமே இது சாத்தியமானது. இப்படம் நல்ல படமாக இல்லாதிருந்தால் இவ்வளவு பேரைச் சென்றடைந்திருக்காது.

இது ஒரிஜினல் சூப்பர் ஹீரோ படம் என்பதால்தான் உலகம் முழுவதும் பேசப்படுகிறது. சூப்பர் ஹீரோ ஐடியாவைத் தவிர நாங்கள் எந்தப் படத்தில் இருந்தும் குறிப்புகள் எடுக்கவில்லை. அதனால் இப்படத்தை மக்கள் விரும்புகின்றனர்''.

இவ்வாறு டொவினோ தாமஸ் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x