Published : 17 Jan 2022 10:54 AM
Last Updated : 17 Jan 2022 10:54 AM

இதுதான் நீங்கள்; அனைவராலும் உங்களைப் புரிந்து கொள்ள முடியாது - விராட் கோலி குறித்து அனுஷ்கா நெகிழ்ச்சிப் பதிவு

கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக விராட் கோலி அறிவித்தது குறித்து அனுஷ்கா சர்மா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி, கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்திருந்தார். இது இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கும், வீரர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் நடிகையும், விராட் கோலியின் மனைவியுமான அனுஷ்கா சர்மா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விராட் கோலிக்கு நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை எழுதியுள்ளார். அப்பதிவில் அவர் கூறியிருப்பதாவது:

2014-ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து எம்.எஸ். தோனி ஓய்வு பெற முடிவு செய்ததால் நீங்கள் கேப்டனாக நியமிக்கப்பட்டதாக என்னிடம் நீங்கள் சொன்ன அந்த நாள் எனக்கு நினைவிருக்கிறது. அந்த நாளின் முடிவில் நீங்கள், நான், தோனி மூவரும் உரையாடிக் கொண்டிருந்ததும், அப்போது அவர் உங்கள் தாடி எவ்வளவு விரைவாக நரைக்கத் தொடங்கும் என்று கேலி செய்ததும் எனக்கு நினைவிருக்கிறது. நாம் மூவரும் அதைப் பற்றி பேசி சிரித்தோம்.

அன்று முதல், உங்கள் தாடி நரைப்பதை விட அதிகமாக நான் உங்களிடம் வளர்ச்சியைக் கண்டேன். அபார வளர்ச்சி. உங்களைச் சுற்றியும் உங்களுக்குள்ளும். ஆம், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக உங்கள் வளர்ச்சி மற்றும் உங்கள் தலைமையின் கீழ் இந்த அணி செய்த சாதனைகளை நினைத்து நான் மிகவும் பெருமை கொள்கிறேன். ஆனால் அதை விடவும் உங்களுக்குள் நீங்கள் அடைந்த வளர்ச்சியைப் நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன்.

2014ஆம் ஆண்டில் நாம் மிகவும் சிறியவர்களாக இருந்தோம். நல்ல எண்ணங்கள் நேர்மறை உத்வேகம் மற்றும் நோக்கங்கள் மட்டுமே நம்மை வாழ்க்கையில் முன்னெடுத்துச் செல்லும் என்று நினைத்தோம். அவைகளும் நிச்சயமாக அவ்வாறு செய்யும். ஆனால் சவால்கள் இல்லாமல் இல்லை. நீங்கள் சந்தித்த பல சவால்கள் எப்போதும் ஃபீல்டில் மட்டுமே இருந்ததில்லை. ஆனால், இதுதான் அல்லவா?

உங்கள் நல்ல நோக்கத்திற்கு இடையூறு செய்யும் எதையும் நீங்கள் அனுமதிக்காமல் இருந்ததை எண்ணி நான் மிகவும் பெருமைப்படுகிறேன். சில தோல்விகளுக்குப் பிறகு நீங்கள் முன்னுதாரணமாக வழிநடத்தி, உங்கள் ஆற்றலின் ஒவ்வொரு துளியையும் கொடுத்து களத்தில் வென்று கொடுத்தீர்கள். உங்கள் கண்களில் கண்ணீருடன் நான் உங்கள் அருகில் அமர்ந்திருந்தேன். அப்போதும் நீங்கள் இன்னும் ஏதாவது செய்திருக்கலாமே என்று நினைத்தீர்கள். இதுதான் நீங்கள். இதைத்தான் நீங்கள் மற்றவர்களிடமிருந்தும் எதிர்பார்க்கிறீர்கள். இதுதான் உங்களை என் பார்வையிலும் உங்கள் நலம் விரும்பிகளின் பார்வையிலும் சிறந்தவராக்குகிறது. ஏனென்றால் இவை அனைத்துக்கும் அப்பால் உங்களின் தூய்மையான, கலப்படமற்ற நல்ல நோக்கங்கள் எப்போதும் இருந்தன. அனைவராலும் அதை புரிந்து கொள்ள முடியாது.

இவ்வாறு அனுஷ்கா தனது பதிவில் கூறியுள்ளார்.

A post shared by AnushkaSharma1588 (@anushkasharma)

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x