Published : 15 Jan 2022 01:59 PM
Last Updated : 15 Jan 2022 01:59 PM

'83' படத்தால் ஒரு பெரிய வெளிச்சம் கிடைச்சிருக்கு: நடிகர் ஜீவா பேட்டி

இந்திய கிரிக்கெட் அணி, 1983ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்றதை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள படம் ’83’. இந்தியாவெங்கும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள இந்தப் படத்தில் நடிகர் ஜீவா, கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் பாத்திரத்தில் நடித்தார். இந்தப் படத்தில் நடித்தது வாழ்க்கையில் மறக்க முடியாத அனுபவம் என்று பகிர்ந்துகொண்டார்.

இந்தியா முழுவதும் `83` படத்தை ரசிகர்கள் பெருமிதமாகக் கொண்டாடி வருகிறார்கள். இந்தப் படத்தின் வரவேற்பை எப்படி உணர்கிறீர்கள்?

எல்லோருமே பாராட்டுறாங்க, ரொம்ப சந்தோஷமா இருக்கு. ஆனா, உண்மையில் நான் இந்த படத்தில் எதுவும் காமெடி பண்ணல. ஸ்ரீகாந்த் சார் அந்த சூழ்நிலையில என்ன ரியாக்ட் பணணுவாரோ அதை மட்டும்தான் செய்தேன். நிஜ வாழ்க்கையில ஸ்ரீகாந்த் சாருக்கு ஹியூமர் அதிகம். அது படத்தில கரெக்டா ஒர்க் அவுட் ஆனது சந்தோஷம். அது மக்களுக்குப் பிடிச்சது இன்னும் சந்தோஷம்.

`83` பட வாய்ப்பு எப்படிக் கிடைத்தது?

சிசிஎல் போட்டிகள் நமது நடிகர்களுக்கிடையே நடந்தபோது நான் அதில் விளையாடினேன். எல்லோருக்கும் தெரியும். ஆனால், இந்தப் படத்தின் தயாரிப்பாளர் விஷ்ணு இந்தூரி அந்தப் போட்டிகள் நடத்திய நிறுவனத்தின் ஒரு ஓனர். இந்தப் படம் எடுக்க திட்டமிட்டபோது, அவருக்கு என் ஞாபகம் வந்திருக்கிறது. சிசிஎல் போட்டியின்போது நான் ஒரு கவர் டிரைவ் அடித்திருப்பேன். அது அப்படியே ஸ்ரீகாந்த் சார் விளையாடியது போலவே இருக்கும். அந்த ஷாட்டை, பல்வீந்தர் சிங்கும், விஷ்ணு இந்தூரியும் பார்த்து என்னைத் தேர்ந்தெடுத்தார்கள். உண்மையில் அந்தப் போட்டியில் விளையாடியதுதான் எனக்கு இந்த வாய்ப்பை வாங்கித் தந்தது. அந்த பால் போட்ட பௌலருக்குதான் நன்றி சொல்ல வேண்டும்.

1983-ல் நடந்த உலகக் கோப்பை போட்டியைப் பார்த்திருக்கிறீர்களா?

நான் எல்லாம் சச்சின் காலத்து ஃபேன். அவர் கிரிக்கெட் விளையாடியதைத் தான் அதிகம் பார்த்திருக்கிறேன். இந்தப் போட்டி பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால், பார்த்தது இல்லை. இந்தப் போட்டியின் சின்ன சின்ன கிளிப்ஸ், கொஞ்சம், கொஞ்சம் பார்த்திருக்கிறேன். முழுசாகப் பார்த்தது இல்லை. ஆனால், கபில்தேவை கிரிக்கெட் உலகின் ஹீரோவாக எல்லோருக்கும் தெரியும். அந்தப் போட்டியில் விளையாடிய மற்ற 11 பேரைப் பற்றி எல்லாம் எல்லோருக்கும் தெரியாது. நான் ஸ்கூல் படிக்கும்போது ஒரு முறை பேட்டிக்காக ஸ்ரீகாந்த் சார் வீட்டுக்குப் போயிருக்கிறேன். அப்போது அவர் செய்த சாதனைகள் பற்றி தெரிந்துகொண்டேன். ஆனால் சச்சின், வாசிம் அக்ரம் காலம்தான் என்னுடையது. அவர்கள் விளையாடியதைத் தான் நெருக்கமாகப் பார்த்திருக்கிறேன்.

ஸ்ரீகாந்த் பாத்திரத்தைப் பண்ணலாம் என்று தேர்ந்தெடுத்தது எப்படி?

முதன்முதல்ல இந்த வாய்ப்பு எனக்கு வந்தப்ப ஸ்ரீகாந்த் சார் உலகக் கோப்பையில என்ன பண்ணிருக்காருனு பார்த்தேன். செமி ஃபைனல்ஸ், ஃபைனல்ஸ் ரெண்டுலயும் ஸ்கோர் பன்ணிருக்காரு. அப்படினா கண்டிப்பாக க்ளைமாக்ஸ்ல நம்மள பெரிசா காட்டுவாங்க, இந்தியாவோட பெரிய டைரக்டர் கபீர்கான், அவரோட இயக்கத்துல நடிக்கலாம். அப்புறம், நான் ரன்வீர் சிங், தீபிகா படுகோன் ரெண்டு பேரோட ஃபேன். அவங்களோட சேர்ந்து நடிக்கலாம் என்ற எண்ணம் எல்லாம்தான் முக்கியக் காரணம்.

முதல் முறையா கபீர் சார் பார்த்தப்ப அவர் படத்தோட இன்ஸிடென்ஸ் சொல்ல ஆரம்பிச்சிட்டார். ஆனா அதெல்லாம் உண்மையா நடந்ததுன்னு தெரிய வந்தப்ப இத கண்டிப்பா மிஸ் பண்ணிடக்கூடாதுனு தோணுச்சு. இந்த கேரக்டருக்காக பேச மும்பை கூப்பிட்டிருந்தாங்க. போயிட்டு திரும்ப வர்றப்ப சிவராம் கிருஷ்ணன் சாரை ஏர்போர்ட்ல பார்த்தேன். அவர் என்ன இங்கன்னு கேட்டப்ப `83` பத்தி சொன்னேன். அவர் உடனே ஶ்ரீகாந்த் சாருக்கு போன் போட்டு, ஜீவா உன் ரோல் பண்றான்னு சொல்லிட்டாரு. அவர்கிட்ட பேசினேன். வா மீட் பண்ணலாம் என்று சொல்லி வீட்டுக்கு வரச்சொன்னாரு. அவரை நேர்ல பார்த்த பிறகு நடிக்க முழு தைரியம் வந்துடுச்சு.

`83` தந்த அனுபவம்?

அட்டகாசமான அனுபவம், ஒரு இண்டர்நேஷனல் படம் பண்ண மாதிரி இருந்தது. நீங்க பார்க்கும் போதே அத உணர்ந்திருப்பீங்க. முழுப் படப்பிடிப்பும் லண்டன்லதான் நடந்தது. எல்லா காட்சியிலும் அவ்வளவு கூட்டம் இருக்கும். ஆனாலும் துல்லியமா அந்தக் கூட்டத்த கண்ட்ரோல் பண்ணி பிரமாண்டமா எடுத்தாங்க. அந்த அனுபவமே ரொம்ப புதுசா இருந்தது. படப்பிடிப்பெல்லாம் லார்ட்ஸ் மைதானம், ஓவல் மைதானம் போய் எடுத்தோம். தெருவுல கிரிக்கெட் விளையாடிட்டு இருந்த பையனுக்கு லார்ட்ஸ் மைதானத்தைப் பார்க்கறதே கனவு தான். ஆனா நான் நேர்ல அங்க கிரிக்கெட் விளையாடினதெல்லாம் ஏதோ மாயாஜாலம் மாதிரி தான் இருந்தது. லார்ட்ஸ்ல விளையாடுனதுல என்னோட ப்ரண்ட்ஸ் எல்லோருக்கும் பொறாமை. எல்லோருமே அதப்பத்தியே கேட்டுட்டு இருந்தாங்க. மொத்தமா இந்தப் படமே ரொம்பவும் புதுசா இருந்தது.

பாலிவுட் தமிழிலிருந்து வித்தியாசமாக இருந்ததா?

படம் பார்த்தாவே உங்களுக்கு என்ன வித்தியாசம்னு தெரியும். அவங்களோட செட்டப் பெரிசு. பட்ஜெட் ஜாஸ்தி. அதனால அவங்களோட ஒர்க்கும் பெரிசா இருக்கு. நமக்கு இங்க அந்த பட்ஜெட் கிடைச்சா நாமளும் அவங்க மாதிரி வேலை பார்க்கலாம். அவ்வளவுதான்.

பாலிவுட் வாய்ப்பு வருகிறதா?

இப்போ நிறைய வர ஆரம்பிச்சிருக்கு. நிறைய கதைகள் பத்திப் பேசுறாங்க. ஆனா இன்னும் எதுவும் கமிட் பண்ணல. ஒரு பெரிய வெளிச்சம் கிடைச்சிருக்கு. அத சரியாப் பயன்படுத்திக்கணும். அதனால வெயிட் பண்ணி சரியானதைப் பண்ணலாம்னு இருக்கேன்.

தற்போது நடிக்கும் படங்கள் பற்றி?

இப்போதைக்கு ரெண்டு படங்கள் போய்ட்டு இருக்கு. `வரலாறு முக்கியம்` நல்ல காமெடி படம், ரெடியாகிட்டு இருக்கு. இன்னொன்னு சிவா கூட ‘கோல்மால்`. ஷூட் பரபரப்பா போயிட்டு இருக்கு. அடுத்த புராஜக்ட் பேச்சுவார்தைகள்ல இருக்கு. விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்புகள் வரும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x