Published : 12 Jan 2022 12:49 PM
Last Updated : 12 Jan 2022 12:49 PM

நான் ஒரு சுயநலவாதி இயக்குநர்: ஆனந்த் எல்.ராய் வெளிப்படை

தான் ஒரு சுயநலவாதி இயக்குநர் என ஆனந்த் எல்.ராய் கூறியுள்ளார்.

ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் அக்‌ஷய் குமார், தனுஷ், சாரா அலி கான் உள்ளிட்ட பலர் நடித்த படம் 'அத்ரங்கி ரே'. நேரடியாக ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார்.

இப்படத்துக்குப் பிறகு அக்‌ஷய் குமார் - ஆனந்த எல்.ராய் கூட்டணியில் ‘ரக்‌ஷா பந்தன்’ என்ற படம் உருவாகி வருகிறது. கடந்த ஆண்டு இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டது. தற்போது இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இப்படத்தைத் திரையரங்கில் வெளியிடப் படக்குழு திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில் இயக்குநர் ஆனந்த எல்.ராய் தனது திரைப்படங்களுக்கான நடிகர் தேர்வு குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:

''நான் ஒரு சுயநலவாதி இயக்குநர். என்னுடைய கதாபாத்திரம் ஒரு நடிகருக்குப் பொருத்தமாக இருக்கும் என்றும், அவர் அதற்கு நியாயம் செய்வார் என்றும் எனக்குத் தோன்றினால் மட்டுமே அவரிடம் அது பற்றிப் பேசுவேன். தனுஷுடன் 8 ஆண்டுகளுக்குப் பிறகு சேர்ந்து பணிபுரிந்திருக்கிறேன். என்னைப் பொறுத்தவரை என் கதை, என் படம், என் கதாபாத்திரங்கள்தான் மற்ற அனைத்தையும் விட முக்கியம்.

நன்கு பரிச்சயமான அதே நடிகருடன் இணைந்து பணிபுரியும்போது, முன்பு நடந்த அதே மேஜிக் மீண்டும் நடக்குமா என்ற கவலை எனக்கு ஏற்படுவதுண்டு. ஒருவரை ஒருவர் நன்கு தெரிந்திருப்பதால் அந்த மேஜிக் நிகழாமல் போகலாம்''.

இவ்வாறு ஆனந்த் எல்.ராய் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x