Published : 10 Jan 2022 04:14 PM
Last Updated : 10 Jan 2022 04:14 PM

போலீஸ் எஸ்.பி கையை வெட்ட திட்டமிட்டாரா நடிகர் திலீப்? - புதிய வழக்கின் பின்னணி

நடிகை பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்ட வழக்கில், தன்னை கைது செய்த போலீஸ் எஸ்.பி-யின் கையை வெட்ட மலையாள நடிகர் திலீப் திட்டமிட்டிருந்ததாக காவல் துறையினர் புதிய வழக்கு ஒன்றரை பதிவு செய்துள்ளனர்.

தமிழ், மலையாளம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த பிரபல நடிகை கடந்த 2017-ல் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான வழக்கு நாளுக்கு நாள் புதிய பரபரப்புகளை கிளப்பிவருகிறது. இந்த வழக்கில் 8-ம் பிரதியாக சேர்க்கப்பட்டுள்ள மலையாள நடிகர் திலீப் மீது காவல்துறை மற்றொரு வழக்கை பதிவு செய்துள்ளது. திலீப்பின் நண்பரும், இயக்குநருமான பாலச்சந்திர குமார் என்பவர் சில தினங்கள் முன் ஊடகங்களுக்கு அளித்த பேட்டிதான் காவல்துறை புதிய வழக்கு பதிய காரணம்.

இயக்குநர் பாலசந்திர குமார், "பல்சர் சுனியை திலீப்புக்கு ஏற்கெனவே தெரியும். பலமுறை இருவரும் திலீப் வீட்டில் வைத்துச் சந்தித்துள்ளனர். மேலும் நடிகை பாலியல் துன்புறுத்தல் வீடியோ நகல் ஒன்று திலீப்பிடம் உள்ளது. இந்த வீடியோவை திலீப் தனது நண்பர்களுடன் அமர்ந்து பார்த்ததை நான் கண்டுள்ளேன். ஆரம்பத்தில், பல்சர் சுனி உடனான நட்பை வெளியே கூறினால் தனக்கு ஜாமீன் கிடைப்பதில் சிக்கல் வரும் என்பதால் திலீப் இதை வெளியே சொல்ல வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டார். தற்போது இந்த வழக்கின் முக்கிய சாட்சியான சாகர் வின்சென்ட் என்பவர் மூலமாக இந்த வழக்கில் இருந்து திலீப் தப்பிக்க முயல்கிறார்" என்றவர், "இந்த வழக்கில் தன்னை கைது செய்ய காவல்துறை அதிகாரிகளையும் திலீப் பழிவாங்க முயன்றார்" என்று தெரிவித்து அதிரவைத்தார்.

மேலும் "ஜாமீனில் வெளிவந்த பிறகு திலீப் தன்னை கைது செய்த காவல்துறை அதிகாரிகளை பழிவாங்க தனியாக ஓர் ஆலோசனையை நடத்தினார். திலீப் குறித்த தகவல்களை எங்கு வேண்டுமானாலும் வந்து சொல்லத் தயாராக உள்ளேன். ஏற்கெனவே கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு இதுதொடர்பாக கடிதமும் எழுதியுள்ளேன்" என்றும் பாலசந்திர குமார் தெரிவித்துள்ளார். இந்த பேச்சின் அடிப்படையில் கேரள குற்றப்பிரிவு காவல்துறையினர், நடிகர் திலீப் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளனர்.

இந்த எஃப்.ஐ.ஆரில் திலீப் முதல் குற்றவாளியாகவும், அவரின் சகோதரர் அனூப் என்பவர் இரண்டாம் குற்றவாளியாகவும், திலீப் மைத்துனர் (காவ்யா மாதவன் சகோதரர்) சூரஜ் என்பவர் மூன்றாம் குற்றவாளியாகவும் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களுடன் மேலும் மூவர் பெயரும் எஃப்.ஐ.ஆரில் சேர்க்கப்பட்டுள்ளது. அந்த எஃப்.ஐ.ஆரில், "இவர்கள் அனைவரும் ஆலுவா கொட்டாரக்கடவில் உள்ள திலீப்பின் இல்லத்தில் வைத்து அவரை கைது செய்த அதிகாரிகளுக்கு உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் நோக்கத்தோடு சதித்திட்டம் செய்ய ஆலோசனை நடத்தியுள்ளனர்.

கிடைத்துள்ள தகவலின்படி 2017-ம் ஆண்டு, நவம்பர் 15-ம் தேதி இரவு 10:30 - 12:30 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் இவர்கள் ஆலோசனை செய்துள்ளனர். ஆலோசனையின்போது "என்னை கைது செய்த போலீஸ் எஸ்.பி சுதர்சனின் கையை வெட்ட வேண்டும்" என்று திலீப் கூறியதாக அறியமுடிகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 20-ம் தேதிக்குள் இந்த புதிய வழக்கு தொடர்பாக திருவனந்தபுரம் குற்றப்பிரிவு போலீஸார் நடிகர் திலீப்பிடம் விசாரணை நடத்தி நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உள்ளனர். அதற்கேற்ப நாளை மறுநாள் இயக்குநர் பாலசந்திர குமாரிடம் வாக்குமூலம் பெறவுள்ளனர் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே சில தினங்கள் முன், அதாவது பாலசந்திர குமார் ஊடகங்களிடம் குற்றச்சாட்டுகளை அடுக்கிய பின்னர், நடிகர் திலீப் அவரை சந்திக்க கொச்சியில் இருந்து திருவனந்தபுரம் சென்றுள்ளார். அவரை சந்திக்க நிறைய வாட்ஸ்அப் ஆடியோக்களை அனுப்பிய திலீப், அதில், தான் திருவனந்தபுரத்தில் இருப்பதாகவும், பாலசந்திரன் மீடியாக்களிடம் பேசுவது தன்னை இந்த வழக்கில் மேலும் சிக்கலில் மாட்டிவிடும் என்றும் பேசுவது போல் உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x