Published : 20 Dec 2021 03:59 PM
Last Updated : 20 Dec 2021 03:59 PM

‘ஆன்டி இண்டியன் 2’ கதை தயாராக உள்ளது - ப்ளூ சட்டை மாறன் பகிர்வு

‘ஆன்டி இண்டியன்’ படத்தின் இரண்டாவது பாகத்துக்கான கதை தன்னிடம் தயாராக இருப்பதாக இயக்குநரும், யூடியூப் விமர்சகருமான ப்ளூ சட்டை மாறன் கூறியுள்ளார்.

மூன் பிக்சர்ஸ் ஆதம்பாவா தயாரிப்பில் இளமாறன் (ப்ளூ சட்டை மாறன்) இயக்கிய படம் ‘ஆன்டி இண்டியன்’. இப்படம் கடந்த டிசம்பர் 10 அன்று திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இந்நிலையில், ட்விட்டர் ஸ்பேசஸ் கலந்துரையாடலில் ப்ளூ சட்டை மாறன் ‘ஆன்டி இண்டியன்’ படம் குறித்த பல்வேறு தகவல்களை பகிர்ந்திருந்தார். அதில் அவர், "படம் திரையரங்க அளவில் சரியாக போகவில்லை. ஆனால் சாட்டிலைட் உரிமையை நல்ல விலைக்கு கேட்கிறார்கள். இது மூன்று ஆண்டுகளுக்கு முந்தைய படம். ஒரு வருடம் கரோனாவில் போய்விட்டது. தற்போது இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் டப்பிங் உரிமைகளை கேட்கிறார்கள்.

இது எந்தப் படத்தின் காப்பியும் இல்லை. ஒரு காதல் படம் என்று எடுத்துக் கொண்டால் அதில் காதலன், காதலி இருப்பார்கள். அதுபோல பிணத்தை மையமாக கதைக்குள் வைத்து விட்டாலே மதம், சாதி, இரண்டாவது மனைவி போன்ற பல விஷயங்கள் தானாகவே வந்துவிடும். அந்தப் படத்துக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இது ஓர் உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம். இன்னும் சொல்லப் போனால் இப்படத்தின் இரண்டாவது பாகத்துக்கான கதையே கூட என்னிடம் உள்ளது. அதிலும் அரசியல், மதம் என அனைத்தும் இருக்கும்.

படத்துக்கு பெரும்பாலான ஊடகங்கள் நேர்மறையான விமர்சனங்களைத் தான் கொடுத்திருக்கிறார்கள். ஆனால், சமூக ஊடகங்களில்தான் எதிர்மறை விமர்சனம் அதிகமாக வருகின்றன. இதுபோன்ற சிறிய பட்ஜெட் படத்துக்கு 20 லட்ச ரூபாய் கொடுத்து ஓர் இசையமைப்பாளரை போட வேண்டிய அவசியம் இல்லை. மீண்டும் ஒரு சிறிய படம் செய்தால் அதற்கும் நானே தான் இசையமைப்பேன்” என்று ப்ளூ சட்டை மாறன் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x