Published : 15 Dec 2021 12:01 PM
Last Updated : 15 Dec 2021 12:01 PM

தள்ளிப்போன ‘என்ன சொல்ல போகிறாய்' ரிலீஸ் - அஸ்வினின் பேச்சு காரணமா?

‘என்ன சொல்ல போகிறாய்’ பட வெளியீடு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘என்ன சொல்ல போகிறாய்’. இதில் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான அஸ்வின் குமார் நாயகனாக நடித்துள்ளார். அவந்திகா, தேஜு அஸ்வினி, 'குக் வித் கோமாளி' புகழ் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்தப் படத்தை ஹரிஹரன் இயக்கியுள்ளார்.

இந்நிலையில் இப்படத்தை டிசம்பர் இறுதி வாரத்தில் திரையரங்குகளில் ரிலீஸ் செய்யப் படக்குழு தீர்மானித்திருந்ததாகக் கூறப்பட்டது. ஆனால், தற்போது தவிர்க்க முடியாத சில காரணங்களால் இப்படம் தற்போது இந்த மாதம் வெளியாகாது என்று அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் ரிலீஸ் ஆகலாம் என்று திரையுலக வட்டாரத்தில் கூறப்படுகிறது.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டு பேசினர். இதில் பேசிய அஸ்வின், “நான் கதை கேட்கும்போது பிடிக்கவில்லை என்றால் தூங்கிவிடுவேன். 40 கதைகளைக் கேட்டுத் தூங்கியிருக்கிறேன். நான் தூங்காமல் கேட்ட ஒரே கதை ‘என்ன சொல்ல போகிறாய்’ மட்டும்தான்” என்று கூறியிருந்தார். அஸ்வினின் இந்தப் பேச்சு சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. நெட்டிசன்கள் பலரும் அஸ்வினைக் கடுமையாக விமர்சித்து வந்தனர்.

‘என்ன சொல்ல போகிறாய்’ பட வெளியீடு தள்ளிப் போனதற்கு இந்த சர்ச்சையும் ஒரு காரணமாக இருக்கலாம் என்று சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கிசுகிசுத்து வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x