Published : 11 Dec 2021 02:38 PM
Last Updated : 11 Dec 2021 02:38 PM

தென்னிந்தியப் படங்களில் நடிக்க விருப்பம்: ஆலியா பட்

தென்னிந்தியப் படங்களில் நடிக்க விரும்புவதாக நடிகை ஆலியா பட் பேசியுள்ளார்.

ராஜமெளலி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'இரத்தம் ரணம் ரெளத்திரம்'. இதில் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட், அஜய் தேவ்கன், ஸ்ரேயா சரண் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். டிவிவி நிறுவனம் பெரும் பொருட்செலவில் இப்படத்தைத் தயாரித்துள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் உருவாகியுள்ள இந்தப் படம் வரும் வரும் ஜனவரி 7 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. அதற்கான விளம்பரப் பணிகள் முழு மூச்சில் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் இப்படத்தை விளம்பரப்படுத்துவதற்காக நேற்று ராஜமௌலி, ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட் உள்ளிட்ட படக்குழுவினர் சென்னையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர். இதில் பல்வேறு தகவல்களைப் படக்குழுவினர் பகிர்ந்து கொண்டனர்.

இதில் ஆலியா பட் பேசியதாவது:

''நான் என் திரைப்பயணத்தைத் தமிழில்தான் ஆரம்பித்தேன். இப்போது மீண்டும் இங்கு வந்திருப்பது மகிழ்ச்சி. 'ஆர்ஆர்ஆர்' படத்தைக் காண நானும் மிக ஆவலாக இருக்கிறேன். எனக்கு இப்படத்தில் நடித்தது ஒரு கனவு நனவானது போன்றுதான் இருந்தது. உங்களுக்கு இப்படம் மிகப்பெரிய சந்தோஷத்தைத் தரும்.

பாலிவுட் படத்தில் மட்டும் நடிப்பதில் எனக்கும் ஆர்வமில்லை. ஒரு இயக்குநர்தான் நான் நடிப்பதை முடிவு செய்ய வேண்டும். இயக்குநரின் பார்வைதான் முக்கியம். நான் நடிக்க ஆர்வமாகவே இருக்கிறேன். இப்படத்தில் நடித்தது மிக இனிமையான அனுபவமாக இருந்தது. இந்தப் படத்தில் நடிக்கும்போது ரசிகர்களின் அன்பைப் பார்த்து மிரண்டுவிட்டேன். நான் தொடர்ந்து தென்னிந்தியப் படங்களில் நடிக்க விரும்புகிறேன்''.

இவ்வாறு ஆலியா பட் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x