பெருந்தன்மையுடன் கடந்து செல்வோமாக - அஸ்வினுக்கு 'கைதி’ தயாரிப்பாளர் ஆதரவு

பெருந்தன்மையுடன் கடந்து செல்வோமாக - அஸ்வினுக்கு 'கைதி’ தயாரிப்பாளர் ஆதரவு

Published on

அஸ்வின் குமாருக்கு தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு ஆதரவு தெரிவித்துள்ளார்.

ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘என்ன சொல்ல போகிறாய்’. இதில் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான அஸ்வின் குமார் நாயகனாக நடித்துள்ளார். அவந்திகா, தேஜு அஸ்வினி, 'குக் வித் கோமாளி' புகழ் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்தப் படத்தை ஹரிஹரன் இயக்கியுள்ளார்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த 6ஆம் தேதியன்று சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டு பேசினர். இதில் பேசிய அஸ்வின், “நான் கதை கேட்கும்போது பிடிக்கவில்லை என்றால் தூங்கிவிடுவேன். 40 கதைகளைக் கேட்டுத் தூங்கியிருக்கிறேன். நான் தூங்காமல் கேட்ட ஒரே கதை ‘என்ன சொல்ல போகிறாய்’ மட்டும்தான்” என்று கூறியிருந்தார்.

அஸ்வினின் இந்தப் பேச்சு சமூக ஊடகங்களில் கடும் சர்ச்சையானது. கடந்த 2 நாட்களாக மீம்ஸ், வீடியோ மூலமாக நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் ‘கைதி’, ‘சுல்தான்’ படங்களின் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு அஸ்வினுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் எஸ்.ஆர்.பிரபு கூறியுள்ளதாவது:

சினிமாவில் நாம் பார்க்கும் கதைகளை விட அதிக சுவாரசியங்கள் கதை சொல்லும் நிகழ்வுகளில் உண்டு.பலர் வாழ்வை புரட்டிப்போடும் தருணம் என்பதால் அது சற்றே அந்தரங்கமான விசயமும் கூட. அனுபவக் குறைபாட்டால் நிகழ்ந்த ஓர் சிறுதவறை பெருந்தன்மையுடன் நாம் கடந்து செல்வோமாக. அன்பு உடலுக்கு ஆயுள் அதிகம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in