Published : 06 Dec 2021 02:46 PM
Last Updated : 06 Dec 2021 02:46 PM

கதை கேட்கும்போது பிடிக்கவில்லை என்றால் தூங்கிவிடுவேன்; 40 கதைகள் கேட்டுத் தூங்கியிருக்கிறேன்: அஸ்வின் குமார் பேச்சு

கதை கேட்கும்போது பிடிக்கவில்லை என்றால் தூங்கிவிடுவேன் என்று நடிகர் அஸ்வின் பேசியுள்ளார்.

ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘என்ன சொல்ல போகிறாய்’. இதில் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான அஸ்வின் குமார் நாயகனாக நடித்துள்ளார். அவந்திகா, தேஜு அஸ்வினி, 'குக் வித் கோமாளி' புகழ் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்தப் படத்தை ஹரிஹரன் இயக்கியுள்ளார்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று (06.12.21) சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டு பேசினர்.

இதில் அஸ்வின் குமார் பேசியவதாவது:

''ரசிகர்களின் அன்பால்தான் இங்கு நிற்கிறேன். நீங்கள் தரும் அன்புதான் என்னை வளர்த்துள்ளது. நான் கனவு கண்டிருக்கிறேன். ஆனால், இந்த இடத்திற்கு வருவேன் என்று நினைக்கவில்லை.

‘என்ன சொல்ல போகிறாய்’ படத்திற்கு முன், பின் என என் வாழ்க்கையைப் பிரிக்கலாம். விஜய் தொலைக்காட்சி என் வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்பம் தந்திருக்கிறது. ஒரு காமெடி ஷோ இவ்வளவு பெரிய பிரபலம் தரும் என நினைத்துக் கூடப் பார்க்கவில்லை. உங்கள் அன்புக்கு ஏற்ற சரியான படம் கொடுக்க வேண்டும் என்று காத்திருந்தேன். இப்போது இந்தப் படத்தின் மூலம் உங்களிடம் வந்திருக்கிறேன்.

என்னிடம் ஒரு கெட்ட பழக்கம் உண்டு. நான் கதை கேட்கும்போது பிடிக்கவில்லை என்றால் தூங்கிவிடுவேன். 40 கதைகளைக் கேட்டுத் தூங்கியிருக்கிறேன். நான் தூங்காமல் கேட்ட ஒரே கதை ‘என்ன சொல்ல போகிறாய்’ மட்டும்தான். இயக்குநர் ஹரிஹரன் அவ்வளவு சிறப்பாகச் செய்திருக்கிறார்.

‘என்ன சொல்ல போகிறாய்’ படத்தை நீங்கள் பார்த்துக் கொண்டாடுவதைக் காண ஆவலாக இருக்கிறேன். இந்தப் படம் பல பேரின் கனவு. கண்டிப்பாக ஜெயிக்கும் என நம்புகிறேன்''.

இவ்வாறு அஸ்வின் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x