Published : 10 Mar 2016 04:49 PM
Last Updated : 10 Mar 2016 04:49 PM
புதுமுக இயக்குநர் ஹரி இயக்கத்தில் ஜீவா நடித்து வரும் படத்துக்கு 'சங்கிலி புங்கிலி கதவத் தொற' என்று பெயரிட்டு இருக்கிறார்கள்.
'போக்கிரி ராஜா' படத்தைத் தொடர்ந்து ஜீவா நடிப்பில் உருவாகி இருக்கும் 'திருநாள்' வெளியாக இருக்கிறது.
டி.கே இயக்கத்தில் 'கவலை வேண்டாம்' படத்தில் நடித்திருக்கிறார் ஜீவா. அப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு, தற்போது புதுமுக இயக்குநர் ஹரி இயக்கி வரும் படத்தில் நடித்து வருகிறார். கமல்ஹாசனிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர் ஹரி என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு பழனியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஸ்ரீதிவ்யா, சூரி, ராதிகா சரத்குமார், தம்பி ராமையா ஆகியோர் ஜீவாவுடன் நடித்து வருகிறார்கள். விஷால் சந்திரசேகர் இப்படத்துக்கு இசையமைத்து வருகிறார். இப்படத்தை இயக்குநர் அட்லீ மற்றும் ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனம் இணைந்து தயாரிக்கிறார்கள்.
அட்லீ தனது தயாரிப்பு நிறுவனத்துக்கு 'A for Apple' என்று பெயரிட்டு இருக்கிறார். இப்படத்துக்கு 'சங்கிலி புங்கிலி கதவத் தொற’ (SangiliBungiliKathavaThorae) என்று பெயரிட்டு இருக்கிறார்கள். ஒரே கட்டமாக இப்படத்தின் படப்பிடிப்பை முடிக்கத் திட்டமிட்டு இருக்கிறார்கள்.
ஜீவா நடிப்பில் உருவாகும் முதல் திகில் படம் இது. அது மட்டுமன்றி லாரன்ஸ் நடிப்பில் பெரும் வரவேற்பைப் பெற்ற 'காஞ்சனா' படத்தின் பாடலில் வரும் முதல் வரியைத் தான் படத்துக்கு தலைப்பாக சூட்டியிருக்கிறார்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT