நான்கே நாட்களில் லாபம்: 'மாநாடு' வசூல் குறித்து இயக்குநர் வெங்கட் பிரபு மகிழ்ச்சி

நான்கே நாட்களில் லாபம்: 'மாநாடு' வசூல் குறித்து இயக்குநர் வெங்கட் பிரபு மகிழ்ச்சி
Updated on
1 min read

‘மாநாடு’ வசூல் நிலவரம் குறித்து இயக்குநர் வெங்கட் பிரபு மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிலம்பரசன் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'மாநாடு'. இதில் எஸ்.ஏ.சி, எஸ்.ஜே.சூர்யா, மனோஜ், கல்யாணி ப்ரியதர்ஷன், பிரேம்ஜி, கருணாகரன் உள்ளிட்ட பலர் சிலம்பரசனுடன் நடித்துள்ளனர். யுவன் இசையமைத்துள்ள இந்தப் படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார்.

இப்படம் நவ.25ஆம் தேதி வெளியானது. படம் வெளியானது முதலே வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. பிரபலங்கள், ரசிகர்கள் எனப் பலரும் தங்கள் சமூக வலைதளப் பக்கங்களில் சிம்பு, வெங்கட் பிரபு உள்ளிட்ட படக்குழுவுக்குப் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

‘மாநாடு’ படம் வெளியான மூன்று நாட்களில் ரூ.22 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக அப்படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். விரைவில் இப்படம் தமிழகத்தில் ரூ.50 கோடி வசூலிக்கும் என்று சினிமா ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் படம் பெற்றிருக்கும் வரவேற்பு குறித்து இயக்குநர் வெங்கட் பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:

''வெறும் நான்கே நாட்களில் நம் அனைத்து தமிழக விநியோகஸ்தர்களுக்கும் லாபம் கிடைத்துவிட்ட செய்தி மகிழ்ச்சியைத் தருகிறது. இந்த அன்புக்கு நன்றி மக்களே. அத்துடன் நம் கேரளா மற்றும் கர்நாடகாவுக்கான விநியோகஸ்தர்களுக்கும் மூன்றே நாட்களில் லாபம் கிடைத்துள்ளதாகத் தகவல் வந்துள்ளது. கடவுள் கருணை மிக்கவர்''.

இவ்வாறு வெங்கட் பிரபு கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in