Published : 28 Nov 2021 07:19 PM
Last Updated : 28 Nov 2021 07:19 PM

செல்போனில் ‘மாநாடு’ காட்சிகளை பதிவு செய்ய வேண்டாம் - வெங்கட் பிரபு வேண்டுகோள்

மொபைல் போனில் ‘மாநாடு’ படத்தின் காட்சிகளை பதிவு செய்ய வேண்டாம் என்று இயக்குநர் வெங்கட் பிரபு கோரிக்கை விடுத்துள்ளார்.

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிலம்பரசன் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'மாநாடு'. இதில் எஸ்.ஏ.சி, எஸ்.ஜே.சூர்யா, மனோஜ், கல்யாணி ப்ரியதர்ஷன், பிரேம்ஜி, கருணாகரன் உள்ளிட்ட பலர் சிலம்பரசனுடன் நடித்துள்ளனர். யுவன் இசையமைத்துள்ள இந்தப் படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார்.

இப்படம் தீபாவளி பண்டிகைக்கு வெளியாகவிருந்து பின்னர் நவ.25ஆம் தேதி வெளியானது. படம் வெளியானது முதலே வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் தங்கள் சமூக வலைதளப் பக்கங்களில் சிம்பு, வெங்கட் பிரபு உள்ளிட்ட படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் பலரும் படம் வெளியான முதல் நாளிலிருந்தே திரையரங்கில் படத்தில் காட்சிகளை தங்கள் செல்போனில் படம்பிடித்து அதை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

இது போன்ற செயல்களில் யாரும் ஈடுபட வேண்டும் என்று இயக்குநர் வெங்கட் பிரபு கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:

‘மாநாடு’ மீது நீங்கள் ஒவ்வொருவரும் காட்டும் அதீத அன்பிற்கு நன்றி. உங்கள் மொபைல் போனில் காட்சிகளை பதிவு செய்து சமூக ஊடகங்களில் பகிர வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். இது ஒரு குற்றச் செயல். திரையரங்குகளில் மட்டுமே சினிமா அனுபவத்தை அனைவரும் அனுபவிப்போம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x