Published : 23 Nov 2021 05:13 PM
Last Updated : 23 Nov 2021 05:13 PM

‘சுருளி’ சென்சார் செய்யப்பட்ட பிரதி அல்ல: தணிக்கை வாரியம் விளக்கம்

மலையாளத்தில் வெளியாகியுள்ள ‘சுருளி’ திரைப்படம் தணிக்கை செய்யப்பட்ட பிரதி அல்ல என்று மத்திய தணிக்கை வாரியம் விளக்கம் அளித்துள்ளது.

கேரளத் திரையுலகின் முக்கிய இயக்குநர்களில் ஒருவர் லிஜோ ஜோஸ் பெலிச்சேரி. 'ஆமென்', 'அங்காமலி டைரீஸ்', 'ஈ.மா.யூ', 'ஜல்லிக்கட்டு' என இவர் இயக்கிய படங்கள் பெரும் வரவேற்பைப் பெற்றவை. இவர் இயக்கிய ‘ஜல்லிக்கட்டு’ திரைப்படம் கடந்த ஆண்டு ஆஸ்கர் போட்டிக்கு இந்தியா சார்பில் தேர்வாகி, பின்னர் வெளியேறியது.

கடந்த ஆண்டு வெறும் 19 நாட்களில் ‘சுருளி’ என்ற படத்தை எடுத்து முடித்தார். இப்படம் சமீபத்தில் சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாகி விமர்சனரீதியாகப் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.

இந்நிலையில் சோனி லைவ் தளத்தில் வெளியாகியுள்ள இப்படம் தணிக்கை செய்யப்பட்ட பிரதி அல்ல என்று மத்திய தணிக்கை வாரியம் விளக்கம் அளித்துள்ளது.

‘சுருளி’ படத்தில் அளவுக்கு அதிகமான கெட்ட வார்த்தைகள் பயன்படுத்தியிருப்பதாக படத்தைப் பார்த்த பலரும் சமூக வலைதளங்களில் விமர்சித்து வந்தனர். தணிக்கை வாரியம் என்ன செய்கிறது என்றும் கேள்வி எழுப்பி வந்தனர்.

இதனைத் தொடர்ந்து இந்த விவகாரம் குறித்து மத்திய தணிக்கை வாரியத்தின் திருவனந்தபுரம் மண்டல அலுவலர் வி.பார்வதி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:

''ஓடிடி தளமான சோனி லைவ் மூலம் வெளியாகியுள்ள மலையாளத் திரைப்படமான 'சுருளி' தணிக்கை வாரியத்தால் சான்றளிக்கப்பட்ட பிரதி அல்ல என்பதை பொதுமக்களின் கவனத்துக்குக் கொண்டுவர விரும்புகிறோம். இது தொடர்பாக பொதுமக்கள் மத்தியில் தவறான தகவல் பரப்பப்படுகிறது''.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x