Published : 17 Nov 2021 05:12 PM
Last Updated : 17 Nov 2021 05:12 PM

இவ்வளவு அன்பை இதுவரை கண்டதில்லை: ஆதரவுக்கு சூர்யா நன்றி

தனக்கு ஆதரவு தெரிவித்தவர்களுக்கு சூர்யா நன்றி தெரிவித்துள்ளார்.

த.செ.ஞானவேல் இயக்கத்தில் சூர்யா, மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ், ரஜிஷா விஜயன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஜெய் பீம்'. அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் இப்படம் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு அரசியல் தலைவர்கள், பல்வேறு திரையுலக பிரபலங்கள் பாராட்டு தெரிவித்தனர். விமர்சன ரீதியாகவும் இந்தப் படம் கொண்டாடப்பட்டு வருகிறது.

இப்படத்தில் வன்னியர் சமுதாயத்தை அவமதிக்கும் விதமான காட்சிகள் அமைக்கப்பட்டிருப்பதாகக் கூறி, அது தொடர்பான அறிக்கையை பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் சூர்யாவுக்கு எதிராகக் கண்டனக் குரல்கள் எழுந்தன.

இந்த எதிர்வினைகளைத் தொடர்ந்து சூர்யாவுக்கு ஆதரவாக இயக்குநர் பாரதிராஜா, டி.ராஜேந்தர், உஷா ராஜேந்தர், அமீர், வெற்றிமாறன், சத்யராஜ், ராஜீவ் மேனன் உள்ளிட்டோர் கருத்து தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் தனக்கு ஆதரவு தெரிவித்தவர்களுக்கு சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:

''அன்புள்ள் அனைவருக்கும், ‘ஜெய் பீம்’ படத்துக்குக் கிடைத்துள்ள இந்த அன்பு திக்குமுக்காடச் செய்கிறது. இதை நான் இதற்கு முன்பு கண்டதில்லை. நீங்கள் எங்களுக்குக் கொடுத்த இந்த நம்பிக்கைக்கும், உத்வேகத்துக்கும் நான் எவ்வளவு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன் என்பதைச் சொல்ல எனக்கு வார்த்தைகள் இல்லை. எங்களோடு நின்ற அனைவருக்கும் இதயம் கனிந்த நன்றிகள்''.

இவ்வாறு சூர்யா தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x