Published : 12 Nov 2021 11:54 AM
Last Updated : 12 Nov 2021 11:54 AM

திரையரங்குகளில் வெளியாகிறது 'மரைக்காயர்: அரபிக்கடலிண்டே சிம்ஹம்' - வெளியீட்டுத் தேதி அறிவிப்பு

மோகன்லால் நடிக்கும் 'மரைக்காயர்: அரபிக்கடலிண்டே சிம்ஹம்' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

மோகன்லால் நடிப்பில் உருவாகியிருக்கும் பிரம்மாண்டத் திரைப்படம் 'மரைக்காயர்: அரபிக்கடலிண்டே சிம்ஹம்' . 2019-ம் ஆண்டே 'மரைக்காயர்: அரபிக்கடலிண்டே சிம்ஹம்' படத்துக்கான தணிக்கை முடிந்தது. கடந்த வருடம் மார்ச் மாதமே படத்தை வெளியிட திட்டமிட்டிருந்தனர். ஆனால், கரோனா நெருக்கடியால் திரையரங்குகள் மூடப்பட்டதால் வெளியீடும் தள்ளிப்போனது.

இதனைத் தொடர்ந்து கரோனா அச்சுறுத்தல் குறைந்ததும் கேரளாவில் மீண்டும் திரையரங்குகள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டது. இதனால் 'மரைக்காயர்: அரபிக்கடலிண்டே சிம்ஹம்' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. பெரும் பொருட்செலவில் எடுக்கப்பட்ட படம் என்பதால் தனியாக வெளியாக வேண்டும், போட்டிக்கு வேறு படங்கள் இருக்கக் கூடாது, அதிக திரையரங்குகள் ஒதுக்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட நிபந்தனைகள் திரையரங்க உரிமையாளர்களிடம் தயாரிப்புத் தரப்பில் போன வருடமே வைக்கப்பட்டன.

ஆனால், இந்தப் படத்துக்குக் கேரள திரையரங்க உரிமையாளர்கள் மொத்தமே 80 திரைகளை மட்டுமே தருவதாகச் சொன்னதாகவும், அதனால் இப்படத்தை நேரடியாக ஓடிடியில் வெளியிட முடிவு செய்திருப்பதாகவும் தயாரிப்புத் தரப்பிலிருந்து அறிவிப்பு வெளியானது.

இந்நிலையில் தற்போது இப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகாமல் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை மோகன்லால் உள்ளிட்ட படக்குழுவினர் தங்கள் ட்விட்டர் பக்கங்களில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். திரையரங்க உரிமையாளர்களுடனான பேச்சுவார்த்தையில் சமரசம் ஏற்பட்டதால் இந்த முடிவைத் தயாரிப்பாளர்கள் எடுத்துள்ளதாகத் தெரிகிறது. இப்படம் வரும் டிசம்பர் 2 அன்று உலகம் முழுவதும் வெளியாகிறது.

2020ஆம் ஆண்டுக்கான தேசிய விருதுகளில் சிறந்த படம், சிறந்த கிராஃபிக்ஸ், சிறந்த உடையலங்காரம் என 3 தேசிய விருதுகளை இந்தப் படம் வென்றது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x