Published : 11 Nov 2021 11:16 AM
Last Updated : 11 Nov 2021 11:16 AM

‘குருப்’ படத்துக்கு மூன்று வருட ஆராய்ச்சி தேவைப்பட்டது: துல்கர் சல்மான்

‘குருப்’ திரைக்கதைக்கு மூன்று வருட ஆராய்ச்சி தேவைப்பட்டதாக நடிகர் துல்கர் சல்மான் தெரிவித்துள்ளார்.

ஶ்ரீநாத் ராஜேந்திரன் இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்துள்ள படம் ‘குருப்’. இப்படத்தில் ஷோபிதா துலிபலா, இந்திரஜித் சுகுமாரன், ஷைன் டாம் சாக்கோ, ஷன்னி வேய்ன், டொவினோ தாமஸ், ஷிவஜித், பத்மனாபன், சுதீஷ், அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்ட பலரும் துல்கருடன் நடித்துள்ளனர். துல்கர் சல்மானின் வேஃபேரர் பிலிம்ஸ் மற்றும் எம் ஸ்டார் எண்டெர்டெய்ன்மெண்ட் இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளன.

1984 முதல் கேரள போலீஸாரால் தேடப்பட்டு வரும் சுகுமாரா குருப் என்பவரின் கதையை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. இப்படம் குறித்து துல்கர் சல்மான் கூறியுள்ளதாவது:

''இயக்குநர் ஶ்ரீநாத் ராஜேந்திரன் என்னுடன் இணைந்துதான் திரைத்துறைக்கு வந்தார். நானும் அவரும் நெருங்கிய நண்பர்கள். எங்களது முதல் படத்தின்போதே ‘குருப்’ பற்றி நிறைய விஷயங்களைப் பேசிக்கொண்டிருப்பார். இந்தப் படத்தைக் கண்டிப்பாக எடுப்பேன் என்று சொல்வார். அந்த நேரத்தில் இவ்வளவு பெரிய பட்ஜெட்டில் படம் எடுக்க முடியுமா என்று எனக்குத் தயக்கமாக இருந்தது. ஆனால், சில வருடங்களுக்கு முன் ‘குருப்’ ஒரு நல்ல திரைக்கதையாக வந்திருக்கிறது என்று என்னிடம் சொன்னார்.

இப்படத்தின் திரைக்கதை ஸ்டைலே புதிதாக இருந்தது. கண்டிப்பாக இப்படத்தைப் பண்ண வேண்டும் என்று அப்போதுதான் முடிவு செய்தோம். குருப் குடும்பத்திலிருந்து ஏதாவது பிரச்சினை வரும் என்ற யோசனை எங்களுக்கு இருந்தது. நல்ல வேளையாக அப்படி எந்த ஒரு தடையும் வரவில்லை. ஆனால், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திலிருந்து எவரும் பாதிக்கப்படக் கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருந்தோம்.

படம் உருவான பிறகு அவர்களை அழைத்துப் படத்தைப் போட்டுக் காட்டினோம். உங்களுக்குத் தவறாக ஏதாவது தோன்றினால் சொல்லுங்கள் மாற்றி விடுகிறோம் என்றோம். அவர்கள் மனதின் வலியை வைத்துக்கொண்டு பணம் சம்பாதிப்பது எங்கள் நோக்கமில்லை. அவர்களுக்குப் படம் பிடித்திருந்தது. அதுவே எங்களுக்கு மகிழ்ச்சிதான். இந்தப் படத்திற்குப் பின்னால் கடுமையான உழைப்பு இருக்கிறது.

மூன்று வருட ஆராய்ச்சிக்குப் பிறகுதான் திரைக்கதையை அமைத்தோம். ஒவ்வொரு நடிகருமே உண்மையாக வாழ்ந்தவர்களை பிரதிபலித்துள்ளார்கள். அந்தக் காலகட்டத்தைக் கொண்டுவருவது எல்லாம் மிகக் கடினமாக இருந்தது. அந்தக் கால மும்பையைத் திரும்பத் திரையில் கொண்டு வந்திருக்கிறோம். ‘குருப்’ எனக்கு மிகச் சவாலாக இருந்த படம். என் வாழ்வில் மிக முக்கியமான படமும் கூட. இப்படம் ரசிகர்களுக்கு மிகச்சிறந்த அனுபவத்தைத் தரும்''.

இவ்வாறு துல்கர் சல்மான் தெரிவித்தார்.

‘குருப்’ திரைப்படம் வரும் 2021 நவம்பர் 12 திரையரங்குகளில் வெளியாகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x