Published : 10 Nov 2021 12:36 PM
Last Updated : 10 Nov 2021 12:36 PM

என் கண் முன்னால் வளர்ந்த குழந்தை; ஆத்மா சாந்தி அடையட்டும் - புனித் மறைவு குறித்து ரஜினி உருக்கம்

புனித் ராஜ்குமார் மறைவுக்கு ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.

கன்னடத் திரையுலகின் சூப்பர் ஸ்டாராகத் திகழ்ந்தவர் புனித் ராஜ்குமார். அக்டோபர் 29-ம் தேதி உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டு, சிகிச்சைப் பலனின்றி காலமானார். அவருக்கு வயது 46. புனித் ராஜ்குமாரின் மறைவு இந்தியத் திரையுலக பிரபலங்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நாடு முழுவதும் பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வந்தனர்.

புனித் இறப்பதற்கு ஒரு நாள் முன்னதாக நடிகர் ரஜினிகாந்துக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதனால் புனித் மறைவுக்கு அவரால் இரங்கல் தெரிவிக்க இயலவில்லை.

இந்நிலையில் தனது மகள் சௌந்தர்யா உருவாக்கிய ஹூட் செயலியில் புனித் ராஜ்குமார் மறைவு குறித்து இரங்கல் தெரிவித்துள்ளார் ரஜினிகாந்த். இது குறித்து அவர் பேசியிருப்பதாவது:

‘நான் மருத்துவமனையில் இருந்தபோது அகால மரணம் அடைந்து விட்டார். அந்த செய்தி எனக்கு இரண்டு நாட்களுக்குப் பிறகு தான் சொல்லப்பட்டது. அதை கேட்டு நான் மிக மிக வேதனை அடைந்தேன். என் கண்ணுக்கு முன்னால் வளர்ந்த குழந்தை, திறமையான அன்பும் பண்பும் கொண்ட அருமையான குழந்தை, புகழின் உச்சியில் இருக்கும் நேரத்தில் இவ்வளவு சின்ன வயதில் அவர் மறைந்திருக்கிறார். அவருடைய இழப்பை கன்னட சினிமாத் துறையால் ஈடு செய்யவே முடியாது. அவரை இழந்து வாடும் அவரது குடும்பதாருக்கு ஆறுதல் சொல்ல என்னிடம் வார்த்தைகளே இல்லை. புனித் ஆத்மா சாந்தி அடையட்டும்.

இவ்வாறு ரஜினி பேசியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x