Published : 04 Nov 2021 03:13 PM
Last Updated : 04 Nov 2021 03:13 PM

’அண்ணாத்த’ இயக்கியதில் ஆனந்தம்: இயக்குநர் சிவா

சென்னை

'அண்ணாத்த' படம் இயக்கியதில் ஆனந்தம் என்று இயக்குநர் சிவா தெரிவித்துள்ளார்.

சிவா இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'அண்ணாத்த'. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தைத் தமிழகத்தில் ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியிட்டுள்ளது. இந்திய நேரப்படி அதிகாலை 4 மணிக்கு முதல் காட்சி தொடங்கியது. தமிழகத்தில் கடும் மழையையும் பொருட்படுத்தாது, காலை 4 மணிக்கே திரையரங்குகளில் ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது.

சென்னையில் காலை 4 மணி காட்சிக்கு 'அண்ணாத்த' படக்குழுவினர் மற்றும் திரையுலக பிரபலங்கள் பலரும் படத்தைக் கண்டுகளித்தனர். இதில் காசி திரையரங்கில் இயக்குநர் சிவா உள்ளிட்ட படக்குழுவினர் 'அண்ணாத்த' படத்தைப் பார்த்தனர்.

'அண்ணாத்த' படம் முடிவடைந்தவுடன் பத்திரிகையாளர்கள் மத்தியில் சிவா பேசியதாவது:

"நீண்ட நாட்களுக்குப் பிறகு பண்டிகை தினத்தில் படம் பார்க்கிறார்கள். அனைவரது முகத்திலும் மகிழ்ச்சி தெரிகிறது. 'அண்ணாத்த' படம் இயக்கியதில் எனக்கு ஆனந்தம். படத்தை மக்கள் ரசிப்பதில் மகிழ்ச்சி. எந்தக் காட்சியை எல்லாம் மக்கள் ரசிப்பார்கள் என நினைத்தேனோ, அந்த இடத்தில் சரியாகக் கைதட்டி ரசிக்கிறார்கள்.

ரொம்ப நெகிழ்ச்சியாகப் படம் முடிந்து வெளியே வருகிறார்கள். ரஜினி சார், கீர்த்தி மேடம் உள்ளிட்ட அனைவருமே அவர்களுடைய கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்துள்ளார்கள். ஒரு இயக்குநராக எனக்குப் பெரிய மகிழ்ச்சி".

இவ்வாறு இயக்குநர் சிவா தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x